

இயற்கை வழங்கும் அழகான காட்சிகளில் மிகவும் சிறப்பானது, வானவில். அது எப்படி உருவாகுகிறது? சூரியனிடம் இருந்து கிடைக்கும் சாதாரணமான வெண்ணிற ஓளி, எல்லா நிறங்களும் அடங்கிய கலவையாகும். வளிமண்டலத்தில் உள்ள மழைத்துளிகளின் இடையே சூரிய ஒளிக் கதிர்கள் கடக்கும்போது முழு அக எதிரொளிப்பு (refraction) நடைபெறுவதால் ஒளி பிரிகை அடைந்து ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என கண்ணைக் கவரும் ஏழு வண்ணங்களில் வானத்தில் வில்லாக தெரிகின்றன.
மழைத்தூறல் அல்லது மழை ஏற்படும்போது சூரிய ஒளியும் இருக்கிறது. அப்போதுதான் வானவில் தெரிகிறது. அதாவது நாம் மத்தியில் நிற்க வேண்டும். சூரியன் நமக்குப் பின்னால் இருக்கவேண்டும். மழை நமக்கு முன்புறம் பெய்து கொண்டிருக்க வேண்டும். இந்த சூழ்நிலையில்தான் வானவில் கண்ணுக்கு புலப்படும்.
சூரியன் வானத்தில் மிக உயரத்திற்கு சென்றுவிட்டால் வானவில் அமையாது. அதனால்தான் அதிகாலையிலோ அல்லது பிற்பகலில் நேரம் சென்ற பிறகே வானவில் தோன்றுகிறது. காலையில் வானவில் தெரிகிறது என்றால் சூரியன் கிழக்கில் இருக்கிறது என்றும், பிற்பகலில் வானவில் தெரிகிறது என்றால் சூரியன் மேற்கில் அமைந்துள்ளது என்று அர்த்தம். கிழக்கில் மழை பெய்கிறது என்று அர்த்தம்.
உலகின் சில நாடுகளில் வானவில் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். உலகிலேயே ஹவாய் தீவுகள்தான் வானவிலைப் பார்த்து ரசிக்க சிறந்த இடமாக உள்ளது என ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். வானவில் தோன்றுவதற்கு தண்ணீர் மற்றும் ஒளி மிகவும் அவசியம். இவ்விரண்டிற்கும் ஹவாயில் பற்றாக்குறையே இல்லை. எனவே இப்பகுதியில் குளிர் மற்றும் மழைக்காலங்களில் (நவம்பர் முதல் ஏப்ரல் வரை) அழகான வானவில்லைப் பார்த்து ரசிக்கலாம். குறிப்பாக சூரிய வெளிச்சம் குறைவாக உள்ள மாலை நேரங்களில் இவற்றைக்காணலாம்.
ஒற்றை வானவில்லை பார்ப்பதே அபூர்வம், சில சமயங்களில் அரிதாக இரட்டை வானவில் சில இடங்களில் தோன்றும். இந்நிலையில் ,அமெரிக்காவின் புளோரிடாவில் (Florida) வானில் ஒரே இடத்தில் 5 வானவில்கள் தோன்றி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது! 2026 ம் ஆண்டு மார்ச் 2 காலை அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பென்சகோலா (Pensacola) நகர மக்கள் தங்கள் வீட்டு ஜன்னல் வழியே வானத்தைப் பார்த்தபோது, கண்களையே நம்ப முடியாத காட்சி காத்திருந்தது. வழக்கமாகத் தோன்றும் ஒரு வானவில்லுக்குப் பதிலாக, 5 அடுக்குகளைக் கொண்ட பிரம்மாண்ட "வானவில் கோபுரம்" வானில் ஜொலித்தது.
தொடக்கத்தில் இது ஏதோ பெரிய வானவில் என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால், உற்றுப் பார்த்தபோதுதான் தெரிந்தது, அது ஒரே அடியிலிருந்து 2 முதன்மை வானவில்களாகப் பிரிந்து நின்றிருந்தது.
வழக்கமாக ஒன்று அல்லது இரண்டு வானவில்கள் மட்டுமே தோன்றும், ஆனால் இத்தகைய அடுக்கு வானவில் (Twinned Rainbow) மிகவும் அரிதானது. சூரிய ஒளி, காற்று, மழைத்துளிகளின் கோணம் சரியாக நேர்க்கோட்டில் அமைந்ததால் இந்த 5 அடுக்குகள் தோன்றின. சில நிமிடங்கள் மட்டுமே இது வானில் தோன்றியது.
அமெரிக்க மாகாணங்களில் வித்தியாசமான புவியியல் அமைப்பை கொண்டது புளோரிடா, மூன்று பக்கங்களிலும் நீரால் சூழப்பட்ட தீபகற்ப பகுதியான இது அமெரிக்காவின் தென்கிழக்குக் கடற்கரையில், மியாமியை உள்ளடக்கிய ஒரு மாகாணம். உலகின் நம்பர் ஒன் கடற்கரை மியாமி. அமெரிக்கா, கிழக்கு மேற்கில் வியாபித்துள்ளதால், ஒரே நாட்டிற்குள் நேர வித்தியாசம் உண்டு. பருவநிலை மாற்றங்களும் உண்டு.
வடக்கிலுள்ள மாநிலங்கள் வாட்டும் குளிரைக் கொண்டவையாக உள்ள நிலையில், புளோரிடா மாநிலம் ‘சூரிய ஒளி மிளிரும் மாநிலமாக' உள்ளது. இங்கு மிதமான வெப்ப நிலையே ஆண்டு முழுவதும் நிலவுகிறது. உலகிலேயே இங்கு மட்டுமே உப்பு நீரில் மற்றும் நன்னீரில் வாழும் முதலைகள் வாழ்கின்றன.