

ஒவ்வொரு வீட்டு சமையலறையிலும் முக்கியமான உணவுகளில் ஒன்றாக முள்ளங்கி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அது வெள்ளை நிற முள்ளங்கிகளாகவே பெரும்பான்மையாக இருக்கின்றன. கண்ணைக் கவரும் வண்ணத்தோடு இருக்கும் சிவப்பு நிற முள்ளங்கி நம் உடல் நலனுக்கு அதிகப்படியான நன்மைகளை தரக்கூடியதாக உள்ளது.
பல்வேறு நன்மைகளை நிரம்பப் பெற்று இருப்பதால் சிவப்பு நிற முள்ளங்கிகள் வரத்து குறைவாக இருந்தாலும் சந்தைக்கு வந்த உடனே விற்பனையாகும் தன்மையாகக் கொண்டதாகவும் இது இருக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு அதிக லாபம் உறுதி செய்யப்படுகிறது.
சிவப்பு நிற முள்ளங்கிகளை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் குளிர்காலங்களில் தரமான விதைகளை தேர்வு செய்து பயிரிட்டால் அதிகப்படியான லாபத்தை பெற முடியும். மேலும், வெள்ளை முள்ளங்கி பயிரிட வளிமண்டலத்தில் இருக்கும் ஈரப்பதம் வளர்ச்சிக்கு பெருமளவில் உதவும். நல்ல வடிகால்களைக் கொண்ட களிமண் நிலத்தில் முள்ளங்கியை பயிரிடுவது சிறந்தது.
விதைகளை இடுவதற்கு முன்பு நிலத்தை இரண்டு, மூன்று முறை நன்கு உழ வேண்டும். அப்போது மாட்டு சாணத்தை நிலத்தில் சேர்த்தால் அதிக பயன் கிடைக்கும். அதன் பிறகு விதையை நிலத்தில் இட்டு பயிரிட வேண்டும். மண்ணில் பி ஹெச் அளவு 6.5 முதல் 7.5 ஆக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஆர்கானிக் உரங்களை தேர்வு செய்து விளைச்சலுக்குப் பயன்படுத்துவது ஏற்றது. பயிரிட்டு 50 முதல் 60 நாட்களில் சிவப்பு முள்ளங்கி பயன் தரக்கூடியது. சிவப்பு முள்ளங்கி தேவை சந்தையில் தற்போது அதிகரித்து இருப்பதால் விவசாயிகளுக்கு அதிகப்படியான வருமானம் கிடைக்கும்.
சிவப்பு நிற முள்ளங்கியில் ஆண்டி ஆக்சிடென்ட் அதிகம் இருக்கிறது. இதனால் அதிக அளவில் ஊட்டச்சத்து இதன் மூலம் மனிதர்களுக்குக் கிடைக்கிறது. மேலும், இதய நோய்க்கு இது மிகவும் ஏற்றது. நோய் பரவலைத் தடுக்கும் ஆற்றல் மிக்கதாகவும் இது உள்ளது. அதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கும் மருந்தாகவும் இது விளங்குகிறது. இதில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உடலுக்குத் தேவையான அதிகப்படியான சக்தி வழங்கக் கூடியதாகவும் இருக்கிறது. தேவை அதிகரித்து இருப்பதால் சிவப்பு நிற முள்ளங்கிகள் விவசாயிகளுக்கு லாபம் தரும் ஒரு விளைபொருளாக உள்ளது.
க.இப்ராகிம்