பிரம்மாண்டமான திமிங்கலங்கள் முதல் மென்மையான பவளப்பாறைகள் வரை பெருங்கடல்கள் உயிர்களால் நிரம்பி வழிகின்றன. கடல் வாழ்க்கை பார்ப்பதற்கு அமைதியாகத் தெரிந்தாலும் பல அச்சுறுத்தல்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஒலி மாசுபாட்டை சொல்லலாம். கடல் சந்திக்கும் அச்சுறுத்தல் என்றதும் உங்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது கழிவுப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள்தான். ஆனால் ஒலியாலும் கடல் சுற்றுச்சூழல் மோசமாக பாதிக்கப்படுகின்றன. இந்தப் பதிவில் அதுகுறித்த சில விஷயங்களைத் தெரிந்து கொள்வோம்.
தகவல் தொடர்பு பாதிப்பு: கடல் உயிரினங்களுக்கு ஒலி ஒரு முக்கிய தகவல் தொடர்பு வழிமுறையாகும். இது அவற்றின் உயிர் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடல் பகுதிகளில் ஒலி மாசுபாடு என்பது கப்பல் போக்குவரத்து, நில அதிர்வு ஆய்வுகள், ராணுவ சோனார் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளால் உருவாக்கப்படுகின்றன. இது இயற்கை ஒலி சூழலுடன் குறுக்கிட்டு, கடல் உயிரினங்கள் எழுப்பும் ஒலிகளை மறைக்கின்றன. இதனால் கூட்டமாக வாழும் உயிரினங்கள் அவற்றின் குழுக்களை பிரிந்து அழியும் நிலைக்கு வழிவகுக்கும்.
மன அழுத்தம் மற்றும் திசை திருப்பல்: கடல்வாழ் உயிரினங்கள் பயணிப்பது, உணவைக் கண்டறிதல் மற்றும் வேட்டையாடிகளைத் தவிர்ப்பது போன்ற விஷயங்களுக்கு ஒலிக் குறிப்புகளையே நம்பியுள்ளன. ஒலி மாசுபாட்டால் இந்த அத்தியாவசிய நடத்தைகள் சீர்குலைந்து உயிரினங்களுக்கு மன அழுத்தம் மற்றும் திசை திருப்பல் ஏற்படுகிறது. கடலுக்கு அடியில் கட்டுமானம் மற்றும் ராணுவ சோனார் போன்ற அதி தீவிர ஒலிகளை உயிரினங்கள் கேட்பதால் அவற்றின் உறுப்புகள் சேதமடைகிறன. நீண்ட காலம் இத்தகைய சத்தத்தில் அவை வெளிப்படுவதால் மன அழுத்தம் ஏற்பட்டு, கடல் உயிரினங்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வே பாதிக்கப்படுகிறது.
நடத்தை மாற்றம்: மனிதர்கள் எழுப்பும் சத்தத்தினால் கடல் விலங்குகளின் நடத்தை பல்வேறு வழிகளில் மாறுகிறது. டால்ஃபின்கள் மற்றும் திமிங்கலங்கள் போன்ற சில இனங்கள் சத்தமான பகுதிகளைத் தவிர்ப்பதற்காக அவற்றின் குரல் ஒலி அல்லது இடப்பெயர்வு முறைகளை மாற்றலாம். இதனால் மற்ற விலங்குகளுக்கான உணவு, இனச்சேர்க்கை, வேட்டையாடும் நடத்தைகள் முற்றிலும் மாறுபடும்.
பாதிக்கப்படும் கடல் பாலூட்டிகள்: திமிங்கலங்கள், டால்பின்கள் போன்ற கடல் பாலூட்டிகள் ஒலி மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இவற்றின் ஒட்டுமொத்த வாழ்வுக்கும் ஒலியையே பெரிதளவில் நம்பியுள்ளதால், ஒலி மாசுபாடு இவற்றின் வாழ்க்கையை அதிகம் பாதிக்கின்றன. கடற்படையினரால் உருவாக்கப்படும் சோனார் போன்ற அதிதீவிர அதிர்வு ஒலிகளால், அவற்றின் காது கேட்கும் தன்மை பாதிக்கப்படுகிறது. இதனால் அவற்றின் வாழ்க்கை முறை முற்றிலும் சீர்குலைந்து மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
மேலும் ஒலி மாசுபாடு மீன்கள் மற்றும் முதுகெலும்பு இல்லாத பிற உயிரினங்களையும் வெகுவாக பாதிக்கிறது. மீன் முட்டைகளின் வளர்ச்சியில் ஒலி மாசுபாடு தலையிடக்கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன. இது மீன்கள் உயிர் வாழும் விகிதங்கள் குறைவதற்கும், அவற்றின் எண்ணிக்கை குறைவதற்கும் வழி வகுக்கும். இத்தகைய இடையூறுகளால் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு முழு உணவுச் சங்கிலியையுமே பாதிக்கும் அபாயம் உள்ளது.