

சிறுவயதில் "கண்ணைக் கொத்துவான் கொம்பேறி மூக்கன்" என்று பெரியவர்கள் சொன்ன கதைகளைக் கேட்டுப் பாயை நனைக்காத கிராமத்து மனிதர்களே இருக்க முடியாது. இந்த மரமேறிப் பாம்பு பற்றிய கற்பனைகளையும் கட்டுக்கதைகளையும் தாண்டி, கொம்பேறி மூக்கன் குறித்த சிலிர்க்க வைக்கும் அறிவியல் உண்மைகளைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!
நான் சிறுவனாக இருந்த போது இந்த கொம்பேறி மூக்கனை பற்றி கதைகள் கேட்டு பயந்து கிடந்ததுண்டு. 'நல்ல பாம்பிடம் தப்பிக்கலாம்; ஆனால் கொம்பேறி மூக்கனிடமிருந்து எந்த கொம்பனும் தப்பிக்க முடியாது' சொல்லுவார் எங்கள் வீட்டு தோட்ட வேலை பார்த்தவர். இதை பற்றி பல உடான்ஸ் கதைகளையும் கூறியிருக்கிறார். அவை மறந்து விட்டது.
கொம்பேறி மூக்கன் (Bronze back Tree Snake) என்பது தென்னிந்தியாவில், கிராமப்புறங்களில் காணப்படும் ஒரு சாதாரண மரமேறிப் பாம்பு ஆகும். இதைப்பற்றி பல கட்டுக்கதைகளும், அவற்றை மறுக்கும் அறிவியல் உண்மைகளும் உள்ளன. அவை என்னவென்று பார்ப்போமா..?
முதலில் சுடுகாடு வரை பார்க்கும் கதை: இப்பாம்பு கடித்தவுடன் வேகமாக மரத்தில் ஏறி, தான் கடித்த நபர் இறந்துவிட்டாரா என்றும், அவரின் உடல் சுடுகாட்டில் எரிக்கப்படுவதையும் மரத்தின் உச்சியில் இருந்து பார்த்து உறுதி செய்து கொள்ளும் என்றும் அப்படி நிகழாத பட்சத்தில் மறுபடியும் அந்த நபரை பின் தொடர்ந்து போய் போட்டுவிடும் என்றும் கட்டு கதை இன்றும் கிராம புறங்களில் கதைக்கப்படுகிறது. உண்மையில் கொம்பேறி மூக்கன் ஒரு நஞ்சற்ற (Non-venomous) பாம்பு ஆகும்.
இது மிகவும் சங்ககோஜி. போடவும் தெரியாது; கொட்டவும் தெரியாது. அப்படி போட்டாலும் ஒன்னும் ஆகாது. இதன் கடி சாதாரணப் பூச்சிக்கடியைப் போன்றதே தவிர மரணத்தை ஏற்படுத்தாது.
இரண்டாவது அதற்கு பழி வாங்கும் குணம் உள்ளது என்ற புருடா. தன்னை அடித்தவரையோ அல்லது துன்புறுத்தியவரையோ நினைவில் வைத்துப் பழிவாங்கும் ஆற்றல் இதற்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. விஞ்ஞான ஆராய்ச்சிகள் படி பாம்புகளின் மூளைக்கு பச்சாதாபம், கவலை, மனிதர்களை பழிவாங்கும் அளவுக்கு நினைவாற்றல் மற்றும் உணர்வுப் பூர்வமான சிந்தித்து செயல்படும் புத்தி கிடையாது.
அது பாவம் இரை தேடும் தனக்கு ஆபத்து என்றால் போடும் அல்லது ஓடும் வேறொன்றும் தெரியாது.
கொம்பேறியை பற்றி இன்னொரு வதந்தி.. இந்த பாம்பு கண்களை குறி வைத்து தாக்கும் என்பது. இதற்கும் ஆதாரம் ஒன்றும் இல்லை என்று பாம்புகளை பற்றி நன்கு அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
இன்னொரு பரபரக்கும் நம்பிக்கை. இந்த பாம்பு ஒரு பறக்கும் பாம்பு என்பதுதான். இது ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குப் பறந்து செல்லும் திறன் கொண்டது என்பதும் ஆராய்ச்சியாளர்களால் அங்கீகரிக்க முடியவில்லை. இந்த பாம்பின் மின்னல் போன்ற சுறுசுறுப்பு காரணம் இது அதி வேகமாக மரம் விட்டு மரம் ஏறி தன் இரையை பிடிக்கிறது. இதை ஜப்பானிய அதி வேக ரயிலுக்கு ஒப்பிடலாம். அந்த ரயிலை போலவே முகம் நீண்டு கூர்மையாக aerodynamic கொம்பேறி மூக்கனுக்கு அமைந்துள்ளது. வேகமாக போகும் ரயில்களை கூட பறக்கும் ரயில் என்றுதான் நாம் கூறுகிறோம்.
மொத்தமாக சொல்லப்போனால் இந்த பாம்பு ஒரு பாவப்பட்ட ஒல்லி பிச்சான் பாம்பாக்கும். மனிதர்களைக் கண்டால் ஓட்டமாய் ஓடி மர உச்சிக்கு ஏறி மறைந்துவிடும். தற்காப்பு குணம் கொண்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த பாம்பினை பற்றிய வதந்திகளை மையமாக வைத்து படம் எடுத்து பணமும் பார்த்து விட்டார்கள் சில பட தயாரிப்பாளர்கள்.
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், கிராமத்து வதந்திகளிலிருந்து விடுபட்டு, இயற்கையின் மீதான அறிவியல் பார்வையைப் பெறுவதன் மூலம் பாம்புகள் குறித்த தேவையற்ற பயத்தை முற்றிலுமாகத் தவிர்க்கலாம்.