தமிழ்நாட்டில் முதல்முறையாக திருச்சி ஏரிக்கு நடுவே 25 குறுங்காடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களும், மனித நாகரீக நடவடிக்கைகளும் இயற்கைக்கு சவால் விடும் வகையிலும், இடையூறாகவும் மாறி வரக்கூடிய நிலையில், தமிழ்நாட்டின் முதல் முறையாக சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு திட்டம் தீட்டப்பட்டு அது நடைமுறையும் படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதல்முறையாக திருச்சி மாவட்டம் குண்டூர் பகுதியில் உள்ள குண்டூர் ஏரிக்கு நடுவே செயற்கை மணல் திட்டுக்களை ஏற்படுத்தி அவற்றின் மீது குறுங்காடு அமைக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. 377 ஏக்கர் பரப்பளவு கொண்ட குண்டூர் ஏரி, 670 ஏக்கர் பாசன நிலங்களுக்கு நீர் ஆதாரமாக திகழ்கிறது. விவசாயத்திற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த குண்டு ஏரி தற்போது பறவைகளுக்கான வாழ்விடமாகவும், மனிதர்களுக்கான சுற்றுலாத்தலமாகவும், இயற்கைக்கேற்ற காடுகளின் இருப்பிடமாகவும் உருவாக இருக்கிறது.
இதற்காக குண்டூர் ஏரியில் உள்ள பல்வேறு பகுதிகள் தூர்வாரப்பட்டு அதில் கிடைத்த மணல்களைக் கொண்டு பறவை, விமானம், இலை, இதயம் போன்ற வடிவங்களில் மணல் திட்டுகள் அமைக்கப்பட்டு அவற்றில் மியாவாகி முறையில் குறுங்காடு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குண்டூர் ஏரியின் உள்ளும் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 120 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
குண்டூர் ஏரியில் அமைக்கப்பட்டுள்ள 25 குறுங்காடுகளும் வளர்ந்த பிறகு பறவைகளின் மிகப்பெரிய இருப்பிடமாக திகழும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் குண்டூர் ஏரியை சுற்றிலும் நடைபாதை செய்வதற்கு ஏற்றவாறு பாதைகள் அமைக்கப்பட்டு பொழுதுபோக்கு இடமாகவும் மாற்றப்பட்டு வருகிறது.