
சிரிக்க வைப்பவர்களை நாம் சுலபமாக காமெடியன், காமெடி பீசு என்று சொல்லி விடுகிறோம். ‘நம்மளால எல்லாரும் சிரிக்கிறாங்கன்னா நமக்கு பெருமை தானே' என்று நினைக்கும் காமெடியர்கள் தான் நம்மை காட்டிலும் குணத்திலும், சமூக அக்கறையிலும் ஒரு படி மேலே உயர்ந்து இருக்கிறார்கள். தனது காமெடியால் மக்களை சிரிக்கவும், சிந்திக்கும் வைத்தவர் தான் 'ஜனங்களின் கலைஞன்' என்று போற்றப்படும் 'சின்ன கலைவாணர்' விவேக் ஐயா அவர்கள்.
'தமிழகத்தில் மட்டும் ஒரு கோடி மரங்களை நட வேண்டும்' என்ற ஐயா அப்துல் கலாமின் குறிக்கோளை, அவரது மறைவிற்குப்பின், விவேக் அவர்கள் ஒரு பசுமை இயக்கத்தை தொடங்கி அதன் மூலம் ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்ற குறிக்கோளுக்குள் முழு மூச்சில் இறங்குகிறார். அதுமட்டுமில்லாமல் பயணங்கள் மேற்கொள்ளும் போது கூட, விதைப்பந்துகளை ஒவ்வொன்றாக சாலையின் ஓரத்தில் வீசிக்கொண்டே செல்வார்.
அப்படிப்பட்ட உன்னதமான கலைஞன் தான் நம் விவேக் ஐயா அவர்கள். கலாம் அவர்களின் அன்பிலும், சமுதாய அக்கறையிலும் ஈர்க்கப்பட்டவர் தான் விவேக் அவர்கள். மேடையில் பேசும்போது கூட, ஒரு சில நேரம் அப்துல் கலாம் அவர்களை மேற்கோள் காட்டி பேசுவது வழக்கம். ஏனென்றால் கலாம் அவர்களின் கருத்துகளும், சிந்தனைகளும் முழுமையாக இளைஞர்களுக்கு போய் சேர வேண்டும் என்பதில் விவேக் அவர்கள் உறுதியாக இருப்பார். ஐயா கலாமும் ஐயா விவேக்கும் நல்ல சிறந்த நண்பர்கள்.
ஒரு நாள் விவேக்கிடம் கலாம் அவர்கள், “சார் நீங்க நல்லா காமெடி பண்றீங்க..! அந்த காமெடி மூலம் சிந்திக்கவும் வைக்கிறீங்க..! அதோட மரம் வளக்குறது பத்தியும், இயற்கை பாதுகாப்பு பத்தியும் உங்க காமெடி மூலம் சொன்னீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்..!” என்று ஐயா கலாம் சொன்னதை விவேக் அவர்கள் ஒரு பொது மேடையில் கூறி, அதன்படியே மரக்கன்றுகளை நட ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 25 லட்சம் மரக்கன்றுகளை நட்டு இருக்கிறார். இப்போது விவேக் அவர்கள் நம்மிடம் இல்லாவிட்டாலும், அவர் நட்டு வைத்த மரங்கள் மூலம் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
‘உலகம் உன்னை அறிவதை விட உலகிற்கு உன்னை அறிமுகம் செய்து கொள்’ என்ற கலாமின் வார்த்தைகளுக்கு மிகவும் பொருத்தமானவர் விவேக் அவர்கள். வாழும் வாழ்க்கை நமக்கானது மட்டும் அல்ல பிறருக்காகவும் தான்' என்பதில் உறுதியோடு இருப்பார்.
இப்படிப்பட்ட உன்னதமான மனிதர்கள் வழியில் நாமும் நடக்க வேண்டும். ஒவ்வொரு நல்ல காரியங்களில் ஈடுபடும் போது, நாம் மரக்கன்றுகளையும் நடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். நம் தாய்க்கு நாமதான் துணை. அதேபோல் நமது பூமி தாய்க்கும் நாம தானே துணையாக இருக்க வேண்டும். மரக்கன்றுகளை நடுங்கள். நெகிழியை தவிருங்கள்.
பசுமை நாயகனைப் போலவே நாமும் இயற்கையின் மீது அக்கறையுடன் இருக்க வேண்டும். 'மரம் வளர்ப்போம். மழை பெறுவோம்' இது வெறும் வாகனங்களின் பின்னாடி எழுதும் வசனம் மட்டுமல்ல, நம் உயிரைக் காக்கின்ற மந்திரச்சொல்! நடந்து கொண்டே இருப்போம் என்றென்றும் இயற்கையின் வழியில். கோடான கோடி வரங்களை இயற்கை நமக்கு மரங்கள் மூலம் கொடுக்கிறது.