

வீட்டின் உட்புறங்களில் வளர்க்கக்கூடிய 'இன்டோர்' தாவரங்களில் மணி பிளான்ட் முதலிடம் வகிக்கிறது. வீட்டையும் அலுவலக மேசையையும் அழகு படுத்த மணி பிளான்ட் செடி வைக்கப்படுகிறது. மண்ணிலும் நீரிலும் எளிதாக வளரக்கூடியதாகவும் சுலபமாக பராமரிக்கக் கூடியதாகவும் இருக்கும் இந்த செடி கொசுக்களை விரட்டும் என பலர் கூறுகின்றனர்.
ஆனால் உண்மையில் மணி பிளான்ட் செடிகள் கொசுக்களை விரட்டும் தனி பண்புகளை பெற்றிருக்க வில்லை. துளசி, வேம்பு, லாவண்டர் போன்ற செடிகள் மட்டுமே இயற்கையாக பூச்சிகளை விரட்டும் நறுமணங்களை பெற்றிருக்கின்றன. அத்தகைய பண்பு மணி பிளான்ட் செடியில் மிகவும் குறைவு. ஆகவே மணி பிளான்ட் செடி வளர்த்தால் பூச்சிகள் வரவே வராது என்று கூறுவது தவறானதாகும்.
மணி பிளான்ட் செடியின் நன்மைகள்
1. மணி பிளான்ட் செடி வீட்டில் உள்ள காற்றை சுத்தமாக வைத்திருப்பதோடு, சுற்றுப்புறக் காற்றையும் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
2. மணி பிளான்ட் செடியை வீட்டிற்குள் வளர்க்கும் போது அதனுடைய செழிப்பான பச்சை இலைகள் வரவேற்பறை, பால்கனி, அலுவலகம் போன்ற இடங்களை அழகாக காட்டுகின்றன.
3. வீட்டிற்குள் இருக்கும் வைஃபை, மொபைல், லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்களில் இருந்து வெளிவரும் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சை மணி பிளான்ட் செடிகள் ஓரளவு குறைக்க உதவுவதாக நம்பப்படுகிறது.
4. வீட்டிற்குள் வளர்க்கப்படும் மணி பிளான்ட் செடியின் பச்சை இலைகளை பார்க்கும் பொழுது பார்ப்பவர்களின் மன அழுத்தம் குறைந்து கவனம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
5. வாஸ்து சாஸ்திரத்தின் படி நேர்மறை ஆற்றலின் சின்னமாக மணி பிளான்ட் இருப்பதால் நல்ல அதிர்ஷ்டம் மற்றும் நேர்மறை ஆற்றலை குறிக்கும் செடியாக இது கருதப்படுகிறது.
6. தண்ணீரிலும் மண்ணிலும் எளிதாக வளரக்கூடிய மணி பிளான்ட் செடிக்கு அதிக பராமரிக்கும் அதிக கவனமும் தேவையில்லை என்பதால் வளர்ப்பது எளிதான செயலாகும்.
மணி பிளான்ட் செடி வளர்ப்பதற்கான வழிமுறை
மணி பிளான்ட் செடியை அதிக சூரிய ஒளிபடாத இடத்தில் வீட்டின் தென்கிழக்கு திசையில் வைப்பது நல்லது. மண்ணை முற்றிலும் உலர விடாமல் தவறாமல் செடிக்கு தண்ணீர் ஊற்றி காய்ந்த மஞ்சள் நிற இலைகளை பறித்து அகற்றினால் செடி செழிப்பாக வளரும்.