

பாம்புகள் என்றாலே உயிரைக் கொல்லும் விஷமுள்ளவை என்ற அச்சம் அனைவரிடமும் இருக்கிறது. ஆனால் கொலுப்ரிடே (Colubridae) குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலான கீல்பேக்( keelbach) பாம்புகள் விஷத்தன்மை அற்றவையாக இருக்கின்றன. பல்லுயிர் பெருக்கத்திற்கு காரணமான இந்திய எல்லைப் பகுதியில் விஞ்ஞானிகள் 2 புதிய கீல்பேக் இன பாம்புகளை கண்டறிந்துள்ளனர். அந்த பாம்புகள் குறித்தும் அவற்றின் பயன்கள் குறித்தும் இப்பதிவில் காண்போம்.
இந்தியாவின் ஊர்வன விலங்கு பட்டியலில் 'கீல்பேக்' என்ற இரண்டு அரியவகை பாம்பு இனங்களை டேராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மிசோரம் மாநிலத்தின் 'நெங்புய்' வனவிலங்கு சரணாலயத்தில் ராகைன் கீல்பேக் (Rakhine Keelback - Herpetoreas davidi), வகை பாம்பு கண்டறியப்பட்டது. அருணாச்சல பிரதேசத்தின் 'நாம்தாபா' தேசிய பூங்கா மற்றும் 'கம்லாங்' புலிகள் காப்பகத்தில் கச்சின் ஹில்ஸ் கீல்பேக் (Kachin HillsKeelback - Hebius) வகை பாம்பும் கண்டறியப்பட்டது.
மியான்மர் நாட்டில் மட்டுமே இருந்த இந்த 2 வகை பாம்பு இனங்கள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது இந்தியாவின் வடகிழக்கு பகுதிக்கும், தென்கிழக்கு ஆசியாவிற்கும் உள்ள சுற்றுச்சூழல் தொடர்பை உறுதிபடுத்துவதாக உள்ளது.
மேலும் வடகிழக்கு இந்தியாவில் உள்ள கடினமான பல நிலப்பரப்புகளில் குறைவான ஆய்வுகளின் காரணமாக பல்வேறு உயிரினங்கள் ஆவணப்படுத்தப்படாமல் இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்றாக உள்ளது.
காடுகளிலும் நீர்நிலைப் பகுதிகளிலும் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்பு நிலவுவதற்கு நச்சுத்தன்மையற்ற இந்த பாம்புகளே காரணமாக இருக்கின்றன.
கீல்பேக் பாம்புகளின் செதில்கள் மற்ற பாம்புகளைப் போல் மென்மையாக இல்லாமல் சொரசொரப்பாகவும் நடுவில் மேடான
கோடு (Keeled scales) போன்ற அமைப்பை பெற்றிருக் கின்றன. இதனால் காடுகளில் உள்ள இலை தழைகள், சேறு மற்றும் ஈர நிலங்களில் ஒளிந்துகொண்டு எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் தகவமைப்பை பெற்று இருக்கின்றன.
தற்போதைய காலநிலை மாற்றம் மற்றும் காடுகளின் அழிப்பு காரணமாக புதிதாக கண்டறியப்பட்ட இந்த பாம்பு இனங்கள் ஈரமான வெப்பமண்டல காடுகளில் இருந்து வெளியேறி இருக்கின்றன. இந்த கண்டுபிடிப்பு 'நாம்தாபா' மற்றும் 'நெங்புய்' போன்ற பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
இந்தியாவின் சிறந்த பல்லுயிர் களஞ்சியங்களில் ஒன்றான 'நாம்தாபா' தேசிய பூங்காவில் இத்தகைய ஆய்வுகள் புதிய உயிரினங்களை கண்டறிந்து, அழிவிலிருந்து அவற்றை பாதுகாப்பதற்கான திட்டங்களை அரசு வகுக்க உதவிபுரியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வடகிழக்கு இந்தியா 'உயிரியல் புதையல்' என அழைக்கப்படும் நிலையில் மேலும் பல ஆய்வுகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டால், இன்னும் பல புதிய உயிரினங்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவர முடியும் என்பது நிபுணர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.