

சாதாரண தவளைகள் தண்ணீரில் முட்டையிட்டு குஞ்சுகளைப் பொரிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு சாதாரண விஷயம். ஆனால் கங்காருவை போல ஒரு குட்டி பையை வைத்துக்கொண்டு அதில் தனது முட்டைகளைச் சுமக்கும் ஒரு விசித்திரமான தவளையை அமேசான் காடுகளில் ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
இந்த புதிய அபூர்வ உயிரினத்தை மனித உலகம் இப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறது. பல சுவாரஸ்யமான ரகசியங்களை அடக்கி வைத்திருக்கும் இந்த புதிய குட்டித் தவளையைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
வித்தியாசமான உடல் அமைப்பு!
பெரு நாட்டில் ஈக்வடார் எல்லையை ஒட்டியுள்ள அடர்ந்த அமேசான் மலைப்பகுதிகளில் தான் இந்த புதிய தவளை இனம் முதல் முறையாகச் சிக்கியுள்ளது. இந்த தவளை மிகச்சிறிய ஒரு உயிரினம். அதாவது அதிகபட்சமாக மூன்றரை சென்டிமீட்டர் நீளம் மட்டுமே வளரக்கூடியது.
அடர் பச்சை நிறத்தில் உடல் முழுவதும் சின்னச் சின்ன மேடுகளுடன் பார்ப்பதற்கு கியூட்டாக இருக்கிறது. இதன் உடலமைப்பில் இருக்கும் ஆகப்பெரிய ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், இதன் முதுகில் இயற்கையாகவே அமைந்திருக்கும் ஒரு குட்டி பை தான்.
மற்ற தவளைகளைப் போல முட்டையிட நீர்நிலைகளைத் தேடி அலையாமல், தனது முதுகில் உள்ள பையிலேயே முட்டைகளை பாதுகாப்பாக வைத்து அடைகாக்கும் விசித்திரமான பழக்கத்தை இது கொண்டுள்ளது. தண்ணீர் வற்றிப்போகும் என்ற கவலையோ அல்லது மற்ற உயிரினங்கள் முட்டையைச் சாப்பிட்டுவிடும் என்ற பயமோ இதற்கு சுத்தமாகக் கிடையாது.
ஆபத்து!
இந்த அழகான உயிரினத்தை இப்போது தான் உலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் அதற்குள்ளாகவே இது அழியும் நிலையில் இருப்பதாக விஞ்ஞானிகள் மிகவும் வருத்தத்தோடு எச்சரிக்கின்றனர். காடுகளில் ஒட்டுமொத்தமாக இந்த வகையைச் சேர்ந்த எத்தனை தவளைகள் இருக்கின்றன என்ற துல்லியமான கணக்கு இதுவரை யாரிடமும் இல்லை.
தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பருவநிலை மாற்றத்தால் இவற்றின் இருப்பிடம் வேகமாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல், அந்தப் பகுதியில் விவசாயம் செய்வதற்காகக் காடுகளை அழித்துத் தீ வைக்கும் மோசமான சம்பவங்களால் இந்த சிறிய தவளைகளின் ஒட்டுமொத்த வம்சமே அழியும் ஒரு மிகப்பெரிய ஆபத்து அங்கு நிலவுகிறது.
அமேசான் காடுகள் என்பது எப்போதுமே மாபெரும் இயற்கை பொக்கிஷங்களை தன்னுள் அடக்கி வைத்துள்ள ஒரு பிரம்மாண்டமான இடம் என்பதை இந்த தவளை மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக நிரூபித்துள்ளது. இன்னும் தீவிரமாக முழுமையாக ஆராய்ச்சி செய்தால் இதுபோல இதுவரை நாம் பார்த்திராத பல புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.