

நம் நாட்டில் ஆண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களில் பொதுவாக காணப்படுவது வாய் புற்று நோய் எனப்படும் ஓரல் கேன்சர் ஆகும். இது தற்போது இளம் வயதினர் மற்றும் பெண்களையும் பாதிக்கிறது.
நீண்ட நாட்களாக ஆறாத புண் மற்றும் வெண்மை சிவப்பு நிற புள்ளி தழும்புகள் வாயில் தோன்றி வளர்ந்து கட்டுப்படுத்த முடியாத புற்று நோயாக மாறலாம். வாய் புற்றுநோய் வாயில் உள்ள மேல்தாடை, கீழ் தாடை, கன்னத்தில் உள் பகுதி, உதடு, நாக்கின் அடிப்பகுதியில் ஏற்படும்.
வாய் புற்றுநோய் சிறிய வலி இல்லாத புண்ணாகவோ, கட்டியாகவோ தோன்றும். இந்த சிறிய புண் தழும்பாக மாறி செல்களில் மாற்றத்தை உண்டாக்கி கேன்சரை உருவாக்கும்.
ஆரம்ப அறிகுறிகள்:
வாயில் ஆறாத புண், வெள்ளை சிவப்பு நிறத்தில் உள்ள தழும்பு, உள் கன்னத்தில் சிறிய கட்டிகள், உணவு சாப்பிடும் போது எரிச்சல், உதடு நாக்கு மரத்து போதல், வாயை திறக்க சிரமம், குரலில் மாற்றம் போன்றவை. சில நேரங்களில் வாயில் ரத்தம் கசியலாம்.
மூன்று வகைகள்
கொழுப்பு கட்டி: உடம்பின் மற்ற பகுதிகளுக்கு பரவாத சாதாரண கட்டி இரண்டையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடலாம்.
மெதுவாக வளரும் கட்டி: இதையும் அறுவை சிகிச்சை செய்து அகற்றலாம்.
மூன்றாவது நம் செல்கள் கட்டுப்பாடு இன்றி வளர்வதால் வரக்கூடிய கேன்சர் கட்டி. இது சிறியதாக உருவாக்கி உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவக்கூடியது.
வாயில் தோன்றும் வெள்ளை சிவப்பு நிற தழும்புகள் புற்றுநோயின் முந்திய நிலை. இதுவும் புற்று நோயாக மாற வாய்ப்புகள் அதிகம்.
பிற காரணிகள்
* புகைப்பிடித்தல், மது பழக்கம், கூர்மையான பல் இருந்தால் தொடர்ந்து வாயில் உள்ள செல்கள் அழுத்தும், நீண்ட காலத்திற்கு இது போன்ற கிரானிக் இரிடேஷன் ஆவதால் கேன்சராக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது.
* ஸ்பைசி புட், காரம், மசாலா அதிகம் உள்ள ஊட்டச்சத்து குறைந்த உணவுகள் எடுத்துக் கொள்வது.
* பாலியல் நோய்கள், எச்ஐவி வைரஸ், சிண்ட்ரோம் மரபணு குறைபாடு போன்றவை தான் இதன் காரணிகள்.
நம் நாட்டில் 80 சதவீதம் பேர் தாமதமாகவே மருத்துவ ஆலோசனை பெறுகின்றனர். பெரும்பாலோர் இரண்டு முதல் ஆறு மாதங்கள் வரை தாமதம் செய்கின்றனர். தங்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை ஒன்றும் இருக்காது அப்புறம் பார்க்கலாம். மருத்துவரிடம் சென்றால் ஒருவேளை புற்றுநோய் எனக் கூறிவிட்டால் என்ன செய்வது என்ற பயம் தயக்கத்தோடு வருவதில்லை. இது தவிர வேலைப்பளு நேரமின்மை மற்றும் பல காரணங்களாலும் தாமதமாக வருகின்றனர்.
புற்றுநோய் என்பது குணப்படுத்த முடியாத ஒன்றல்ல. நாம் தாமதம் செய்வதுதான் முக்கிய காரணம். இந்த மனநிலை மாறினால் உயிர்களை காப்பாற்றலாம். எவ்வித கேன்சர்களும் அதை தாமதப்படுத்தாமல் உடனடியாக காட்டினால் உரிய நிவாரணம் கிடைக்கும்.
புற்று நோயை நான்கு நிலைகளாக பிரிக்கலாம். முதல் இரண்டு நிலைகளில் பெரும்பாலான புற்று நோய்களைப் போன்றே எளிதாக 90% குணப்படுத்தலாம்.
சிறிய அறுவை சிகிச்சை மூலம் குறைந்த செலவில் உடலுக்கும் முகத்துக்கும் எந்த வித பாதிப்பும் இல்லாமல் சரி செய்யலாம்.
மூன்று, மற்றும் நான்காம் நிலை இருந்தால் 30 சதவிகிதம் மட்டுமே குணப்படுத்த முடியும். அறுவை சிகிச்சை செலவு பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும்.
எச்சரிக்கை
வாயில் ஏற்படும் புண் தழும்பு காயம் போன்றவை 14 நாட்களுக்குப் பின்பும் குணமாகவில்லை என்றால் மருத்துவ ஆலோசனை கண்டிப்பாக பெறவேண்டும். மாதம் இருமுறை சுய பரிசோதனை செய்ய வேண்டும். கண்ணாடி முன் நின்று கன்னம், நாக்கு, உதடு ஈறுகளில் ஏதாவது காயம் கட்டி வெள்ளை சிவப்பு தழும்புகள் உள்ளதா என சோதிக்க வேண்டும்.
நம் நாட்டில் வாய் புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களில் 80% பேர் புகையிலை பழக்கம் உள்ளவர்கள். இப்பழக்கத்தை நிறுத்தினால் நோயை தடுக்கலாம். புகையிலையில் உள்ள நைட்ரோசமைன்ஸ் என்ற வேதிப்பொருள் புற்றுநோயை உண்டாக்கக் கூடியது (Oral cancer awareness).
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் முழுமையாக பல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் 50% புற்றுநோய் இறப்புகளை தடுக்க முடியும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)