

நமது இந்தியாவின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் இதுவரை மனிதர்களின் கண்களுக்கே தென்படாத பல உயிரினங்கள் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் டேராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பை தற்போது நிகழ்த்தியுள்ளனர்.
இதுவரை இந்திய எல்லைக்குள்ளேயே பதிவு செய்யப்படாத இரண்டு புதிய ரக பாம்புகளை அவர்கள் வடகிழக்கு மாநிலங்களில் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்கள். உயிரியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த அபூர்வ பாம்புகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.
பாம்புகளின் பெயர்!
இந்த இரண்டு பாம்புகளும் இதற்கு முன்பு நமது அண்டை நாடான மியான்மரில் மட்டுமே வசிப்பதாக உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் உறுதியாக நம்பி வந்தனர். ஆனால் தற்போது அவைகள் நமது காட்டிலும் இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் முதல் வகையான ரக்கைன் கீல்பேக் (Rakhine Keelback) என அழைக்கப்படும் பாம்பு மிசோரம் மாநிலத்தில் உள்ள நெங்புய் வனவிலங்கு சரணாலயத்தில் தென்பட்டுள்ளது.
அதேபோல கச்சின் ஹில்ஸ் கீல்பேக் (Kachin Hills Keelback) என்று பெயரிடப்பட்ட மற்றொரு வகை பாம்பு அருணாச்சல பிரதேசத்தில் உள்ள நம்தாபா தேசிய பூங்கா மற்றும் கம்லாங் புலிகள் காப்பகப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும் தென்கிழக்கு ஆசியாவிற்கும் இடையே உள்ள மிக நெருக்கமான இயற்கை தொடர்பை இது உணர்த்துகிறது.
விசித்திரமான உடலமைப்பு!
பொதுவாகவே பாம்புகள் என்றால் அதனுடைய தோல் பார்ப்பதற்கு பளபளப்பாகவும் வழுவழுப்பாகவும் இருக்கும் என்பது தான் நம்மில் பலரின் எண்ணம். ஆனால் இந்த கீல்பேக் ரக பாம்புகள் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. இவற்றின் ஒவ்வொரு செதிலுக்கு நடுவிலும் ஒரு சிறிய மேடு போன்ற அமைப்பு நீண்டிருக்கும். இதனால் இதை தொட்டுப் பார்த்தால் ரொம்பவே கரடுமுரடான ஒரு உணர்வு கிடைக்கும்.
இந்த விசித்திரமான சொரசொரப்பான தோலமைப்பு அந்த பாம்புகள் சேறு, காய்ந்த இலைகள் மற்றும் சதுப்பு நிலங்களில் தங்களை எதிரிகளிடம் இருந்து ஈஸியாக மறைத்துக் கொள்ள பேருதவியாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவை நீர்நிலைகளுக்கு அருகிலேயே வாழக்கூடியவை மற்றும் இவற்றிற்கு மனிதர்களைக் கொல்லும் அளவுக்கு எந்த ஒரு கொடிய விஷமும் கிடையாது.
இந்த பாம்புகள் ஈரப்பதம் நிறைந்த வெப்பமண்டல காடுகளில் தான் பெரும்பாலும் வசிக்கின்றன. ஆனால் தற்போது மாறிவரும் பருவநிலை மற்றும் மனிதர்களின் ஆக்கிரமிப்பால் இவற்றின் வாழ்விடங்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலைச் சந்தித்து வருகின்றன. இந்த புதிய கண்டுபிடிப்பானது நமது வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மலைப்பிரதேசங்கள் இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை என்பதைத் தெளிவாக காட்டுகிறது. அந்த கடினமான நிலப்பரப்புகளில் மனிதர்கள் செல்வது சிரமம் என்பதால் இன்னும் பல அரிய விலங்குகள் அங்கு வெளிச்சத்திற்கு வராமலேயே மறைந்து கிடக்கின்றன.
இப்படிப்பட்ட புதிய கண்டுபிடிப்புகள் வெறும் வரலாற்றுப் பதிவிற்காக மட்டுமில்லாமல் அந்த இயற்கை வளங்களை எப்படிப் பாதுகாப்பது என்ற திட்டங்களை உருவாக்கவும் உதவியாக இருக்கும். இந்த அறியப்படாத காடுகளை இன்னும் தீவிரமாக ஆராய்ந்தால் இதுபோல உலகை வியக்க வைக்கும் பல புதிய உயிரினங்கள் வருங்காலத்தில் நமது கண்களுக்குக் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.