பட்டாம் பூச்சி என்று கூறப்படும் வண்ணத்துப் பூச்சிகள் பல வண்ணங்களில் மக்களை கவரும் அழகு பெற்றதல்லவா? சிறு வயதில் பட்டாம் பூச்சிகளைப் பிடிக்க ஓடுவதே ஒரு விளையாட்டாக இருக்கும். ஆனால் தற்போது அதை பார்ப்பதே அரிதாக இருக்கிறது. நீங்களே கூறுங்கள் பட்டாம் பூச்சியை கடைசியாக எப்போது பார்த்தீர்கள்? பட்டாம் பூச்சிகள் அழிந்து வருவதற்கு என்ன காரணம்? என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பட்டாம் பூச்சிகள் சுற்று சூழலுக்கு பல நன்மைகளை தருகின்றன. பட்டாம் பூச்சிகள் தோட்டங்களில் உள்ள இலைகளை சாப்பிட்டு விடும் என்றுதான் நாம் பயந்திருப்போம். ஆனால் உண்மையாகவே பட்டாம் பூச்சிகள் தோட்டத்திற்கு முக்கியமானவை. ஏனெனில், ஒரு பூவில் இருந்து தேனை உண்ணும் போது மகரந்தத்தை சேகரித்து மற்ற தாவரங்களுக்கு கொண்டு சென்று மகரந்த சேர்க்கையை நிகழ்த்துகிறது. இதனால் பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்கள் என புதிய விதைகளை உற்பத்தி செய்ய உதவுகிறது. பெரும்பாலான தாவரங்களுக்கு இனப்பெருக்கம் செய்ய தேனீக்கள் மற்றும் பட்டாம்பூச்சிகள் போன்ற உயிரினங்கள் முக்கியமானவை.
இயற்கை ஆர்வலரும் மூத்த ஒளிபரப்பாளருமான சர் டேவிட் அட்டன்பரோ கூட, "இயற்கையில் நேரத்தை செலவிடுவது - வீட்டுத் தோட்டத்தில் பட்டாம்பூச்சிகளைப் பார்ப்பது - நமது மன ஆரோக்கியத்திற்கு நல்லது" என்று கூறியிருக்கிறார். இவ்வாறு மனிதர்களுக்கு உதவும் பட்டாம் பூச்சிகள் தற்போது அழிந்து வருகின்றன.
மனிதர்களே காரணம்
பட்டாம் பூச்சிகள் அழிந்து வருவதற்கான முக்கிய காரணம் மனிதர்களே! மனிதர்கள் இயற்கையை சுரண்டுவதுதான் முக்கிய காரணம். தாவரங்களை அழிப்பது, செயற்கை இரசாயனங்களை பயன்படுத்துவது என இயற்கையை அழிக்க மனிதன் செய்யும் செயல்களோ ஏராளம். இதனால் மனிதர்களே மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.
இவ்வாறு நடக்கும் நிகழ்வுகளினால் பட்டாம் பூச்சிகளை கிராமப்புறங்கள் மற்றும் நகரங்களில் பார்ப்பதே அரிதாகிவிட்டது. பல வகைகளில் நன்மை பயக்கும் இந்த பட்டாம் பூச்சிகள் ஒருவகையில் நமக்கு உணவளிக்க காரணமாக அமைகிறது. ஆனால் நாம்தான் தாவரங்களில் புழுக்கள் வருகிறது என்று அதை அகற்றி விடுகிறோம். செயற்கை இரசாயனங்களை தீட்டிவிடுகிறோம்.
மனிதர்கள் இயற்கையை அழிக்க அழிக்க இது போன்ற பல பயனுள்ள உயிரினகளும் அழிந்து விடும். இதனால் பாதிப்பு உண்மையில் மனிதர்களுக்கே.
நம்மால் முடிந்த அளவு தாவரங்களை நட்டு வைத்து இது போன்ற உயிரினங்களை பாதுகாத்துக்கொள்வோம். அது நாளை நம்மை பாதுக்காக்கும் என்பதை உணர்ந்து கொள்வோம்!