தமிழகத்தின் 2400 கோடி மதிப்பிலான சுற்றுலாத் தலம் எங்கே இருக்கிறது தெரியுமா?

தமிழ்நாட்டின் பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகளின் ரூ.2,485 கோடி மதிப்பிலான சுற்றுச்சூழல் மற்றும் நீல கார்பன் சொத்துகளின் முழுமையான தகவல்கள்.
மாங்குரோவ் காடுகள் | Mangrove forest
மாங்குரோவ் காடுகள் | Mangrove forest
கோவீ.ராஜேந்திரன்

வணக்கம், அடிப்படையில் நான் ஓர் ஆட்டோமொபைல் இன்ஜினியர், ரிலாக்சேஷனுக்காக பத்திரிகைகளில் ஆரம்பத்தில் துணுக்குகள் எழுத ஆரம்பித்தேன். பின்னர் கட்டுரைகள் எழுதும் அளவிற்கு வந்துள்ளேன். தமிழகத்தில் வரும் முன்னணி பத்திரிகைகளில் என்னுடைய கட்டுரைகள் 500க்கும் மேற்பட்டவைகள் வந்துள்ளது. பொது அறிவு சம்பந்தமாக இது வரை 12 புத்தகங்கள் எழுதியுள்ளேன். கல்கி ஆன்லைன் பத்திரிகை குழு நிர்வாகம் மற்றும் அதன் ஆசிரியர் குழு அன்பாலும், ஆதரவாலும் இது வரை 300 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி உள்ளேன் என்பதை நன்றியடன் தெரிவித்துக் கொள்கிறேன். வித்தியாமான தகவல்கள் அடங்கிய படைப்புகள் வழங்க வேண்டும் என்பது என் விருப்பம்.

Updated on

கடல் சீற்றங்கள் மற்றும் புயல்களிலிருந்து நமது கடற்கரையைப் பாதுகாக்கும் மாங்குரோவ் காடுகள் வெறும் இயற்கை அரண் மட்டுமல்ல; அது ஒரு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மாபெரும் பொருளாதாரப் புதையல்! ஆயிரக்கணக்கான நீர் வழிகள், கண்கவர் படகு சவாரிகள், விலைமதிப்பற்ற மூலிகைகள் மற்றும் பூமியைக் காக்கும் நீல கார்பன் சேமிப்பு எனப் பிச்சாவரம் நமக்குத் தரும் நன்மைகள் எண்ணிலடங்காதவை. இந்தியாவின் இந்தத் தனித்துவமான சுற்றுலாத் தலம் எப்படி நமது வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் காக்கிறது என்பதன் முழுமையான தகவல்களைத் தொடர்ந்து வாசியுங்கள்!

கடல் சீற்றங்கள், சூறாவளிகள் மற்றும் கடலோர அரிப்புகளிலிருந்து நிலப்பகுதியைப் பாதுகாக்கும் இயற்கை அரணாக விளங்கும் மாங்குரோவ் காடுகள் (Mangrove Forests) இந்தியாவின் மிக முக்கிய இயற்கை பொக்கிஷமாகக் கருதப்படுகின்றன. சுந்தரவனம் (Sundarbans) எனும் சுந்தரவனக் காடுகள் (West Bengal) உலகின் மிகப்பெரிய ஒற்றை மாங்குரோவ் காடாகப் புகழ்பெற்றதாகும். இது இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே, கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் மேக்னா ஆகிய நதிகளின் பிரம்மாண்ட டெல்டா பகுதியில் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அமைந்துள்ள பிச்சாவரம் (Pichavaram) காடுகள் இந்தியாவின் மிக முக்கிய மாங்குரோவ் அமைப்புகளில் ஒன்றாகும். இது வெள்ளாறு மற்றும் கொள்ளிடம் நதிகளின் முகத்துவாரங்களுக்கு இடையே அமைந்துள்ள கில்லாய் ஏரியின் பின்னணி நீர்நிலைகளுடன் (Killai Backwaters) இணைந்து தனித்துவமான இயற்கை எழிலை உருவாக்குகிறது.

இதையும் படியுங்கள்:
தேனீக்களை ஏமாற்றி வௌவால்களுக்கு தேன் கொடுக்கும் விசித்திர பூக்கள்!
மாங்குரோவ் காடுகள் | Mangrove forest

சிதம்பரத்தில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பிச்சாவரம். இங்கு, 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், சதுப்பு நிலக்காடுகளுடன், இயற்கை சூழலுடன், மருத்துவ குணம் கொண்ட, 20 வகையான சுரப்புண்ணை தாவரங்கள், 18 வகையான மூலிகை தாவரங்கள் உள்ளது. சதுப்புநில மரங்கள் ஒரு சில அடி நீரில் நிரந்தரமாக வேரூன்றி உள்ளன. படகு சவாரிக்கு 400 க்கும் மேற்பட்ட நீர் வழிகள் உள்ளன. எனவே இது சிறந்த சுற்றுலாத் தலமாக இருக்கிறது. அதோடு, இழுபடகு மற்றும் படகு போன்ற நீர் விளையாட்டுகளுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகின்றன.

மேலும், இங்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்வாய்கள், ஒரே மாதிரியாக இருப்பது வியப்பாக இருக்கும். இந்தியாவிலேயே சதுப்பு நிலக்காடு ஒரு சுற்றுலா மையமாக திகழ்வது பிச்சாவரம் மட்டும்தான்.

இது 1984ம் ஆண்டு முதல் சுற்றுலா மையமாக இயங்கி வருகிறது. பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் இயற்கை பாதுகாப்பு, சுற்றுலா மற்றும் உள்ளூர் வாழ்வாதாரத்திற்குப் பல நன்மைகளைத் தருகிறது.

இவை புயல் மற்றும் கடல் சீற்றங்களிலிருந்து கடற்கரையைப் பாதுகாப்பதோடு, பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் உதவுகிறது. பல வகையான மீன்கள், பறவைகள் மற்றும் மூலிகைத் தாவரங்களுக்கு வாழ்விடமாக உள்ளது. வளிமண்டலத்திலுள்ள கரியமில வாயுவைக் குறைத்து சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருக்கிறது.

கடந்த 2022-ஆம் ஆண்டில் இது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த 'ராம்சர் தளம்' (Ramsar Site) என்ற அந்தஸ்தைப் பெற்றது. இதன் தற்போதைய சுற்றுச்சூழல் மதிப்பு ₹2,485.38 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த மாங்குரோவ் காடுகளின் பரப்பளவு சுமார் 4,992 சதுர கிலோமீட்டர் ஆகும். இது நாட்டின் மொத்த புவியியல் பரப்பளவில் 0.15 விழுக்காடு ஆகும். கடல் நீரின் உவர்ப்புத் தன்மையும், நன்னீரும் சங்கமிக்கும் சதுப்புநிலக் கடற்கரைப் பகுதிகளில் மட்டுமே இவை வளர்கின்றன. சேறு நிறைந்த நிலப்பகுதியிலும், கடுமையான அலையடிப்புகளுக்கு இடையிலும் தாங்கி நிற்கும் வகையில் இவற்றின் வேர் அமைப்புகள் தண்ணீருக்குள் சிக்கலான வலைப்பின்னல் போலப் படர்ந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளுக்காக பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகளின் மதிப்பை ஆராய்ச்சியாளர்கள் ₹2,485 கோடியாக மதிப்பிட்டுள்ளனர். பெங்களூருவில் உள்ள சமூக மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான நிறுவனத்தின் (ISEC) ஆதரவுடன், மாநில வனத்துறை அதிகாரிகள் கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம்சதுப்புநிலக் காடுகள் வழங்கும் சூழலியல் சேவைகளை மதிப்பீடு செய்து, முதன்முறையாக அந்தச் சூழல் மண்டலத்திற்கு பண மதிப்பை நிர்ணயித்துள்ளனர்.

மாங்குரோவ் காடுகள் | Mangrove forest
மாங்குரோவ் காடுகள் | Mangrove forest

"இந்த ஆய்வின் முடிவுகள், பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகளின் மொத்தப் பொருளாதார மதிப்பை ஒரு ஹெக்டேருக்கு ₹1.83 கோடி (மொத்தம் ₹2,485.38 கோடி அல்லது 289 மில்லியன் அமெரிக்க டாலர்) என மதிப்பிடுகின்றன" என்கிறார் ISEC-இன் சூழலியல் பொருளாதாரம் மற்றும் இயற்கை வளங்கள் மையத்தின் இணைப் பேராசிரியர் எம். பாலசுப்பிரமணியன்.

"ஒரு ஹெக்டேருக்கான இந்த உயர் மதிப்பு, காலநிலை சீரமைப்பு, பல்லுயிர் பாதுகாப்பு, மீன்வள உற்பத்தித்திறன், சுற்றுலா, கடலோரப் பாதுகாப்பு மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றில் சதுப்புநிலக் காடுகளின் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது." என்கிறார்கள்.

நீல கார்பன் மதிப்பீட்டின்படி, சதுப்புநிலத் தாவரங்கள் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 79.449 டன் கார்பனைச் சேமித்து வைக்கின்றன. இது ஒரு ஹெக்டேருக்கு சுமார் 291 டன் கார்பன் டை ஆக்சைடுக்குச் சமமாகும்.

இதையும் படியுங்கள்:
இருட்டில் எதிலும் மோதாமல் வெளவால் பறப்பது எப்படி? அறிவியல் ரகசியம்
மாங்குரோவ் காடுகள் | Mangrove forest

ஒரு டன் கார்பன் டை ஆக்சைடுக்கு 114 அமெரிக்க டாலர் என்ற கார்பனின் புதுப்பிக்கப்பட்ட சமூகச் செலவைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களின் கார்பன் சேமிப்பை ஒரு ஹெக்டேருக்கு சுமார் ₹28 லட்சம் என மதிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் தாவரங்களின் மொத்த கார்பன் சொத்து மதிப்பு ₹387 கோடியாக உள்ளது.

சதுப்புநிலப் படிவுகள் ஒரு பெரிய கார்பன் நீர்த்தேக்கமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 251.14 டன் மண் கரிம கார்பன் இருப்பு உள்ளது. இதன் மதிப்பு ஒரு ஹெக்டேருக்கு ₹90.24 லட்சம் மற்றும் மொத்த மதிப்பு ₹1,224.63 கோடியாகும். தாவரங்கள் மற்றும் மண்ணில் உள்ள கார்பன் இருப்புகளை இணைத்து, பிச்சாவரம் சுற்றுச்சூழல் அமைப்பின் மொத்த நீல கார்பன் சொத்து மதிப்பு ₹1,612 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. நீல கார்பன் பூமிக்கு அடியில் உள்ள வண்டல்களில் சேமிக்கப்படுவதால், தாவரங்கள் மற்றும் மண் அமைப்புகளைப் பாதுகாக்க அவை உதவுகிறது.

logo
Kalki Online
kalkionline.com