
கோடை காலங்களில் வெப்பத்தை உள்வாங்கி குளிர்ச்சியினை அளிப்பது வேங்கை மரத்தின் முதன்மையான செயல்பாடு ஆகும். இந்த மரம் 30 மீட்டர் உயரம் வரை வளரும். சிறந்த சூழ்நிலையில் அதிகபட்சமாக 40 மீட்டர் உயரம் வரை இருக்கும். இதன் இலைகள் ஐந்து கூட்டிலைகளைக் கொண்ட கொத்தாக இருக்க, இலைநுனி வளைந்திருக்கும். மரத்தின் பால் இரத்தசிவப்பு நிறத்தில் இருக்கும். அதனால் இதை உதிர வேங்கை மரம் என்று கூறுவார்கள். பழங்கள் வட்ட வடிவிலும், கிழங்கு போன்ற தோற்றத்துடனும் காணப்படும்.
வேங்கை மரத்தின் பட்டை, விதை மற்றும் இலைகள் மருத்துவப் பயன்பாடு கொண்டவை. இதன் பட்டையை நீர் குடுவையில் ஊற வைத்து குடித்தால் நீரிழிவு குறைய உதவி செய்யும். இதன் மூலிகைகள் ரத்த சுத்திகரிப்புக்கு உதவுகின்றன.
வேங்கை மரத்தின் இலையையும், பூவையும், உடம்பில் தொடர்ந்து பூசிக் குளித்து வந்தால், கொழுப்புக் கட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து விடும். வேங்கை மரத்தை வெட்டும்போது வடிகின்ற இரத்த நிறத்தில் இருக்கும் பாலை கால் பாதத்தில் உள்ள வெடிப்புகள் குணமாகப் பயன்படுத்துவார்கள்.
ஒடிசா மாநிலத்தின் சிமிலிப்பால் தேசிய வனப் பகுதியில் வாழும் கொல் இனத்தினர் வேங்கை மரப் பட்டையை மாமரப் பட்டை உட்பட வேறு சில மரங்களின் பட்டைகளுடன் அரைத்துப் பெருங்குடல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.
வேங்கை மரத்தின் மரப்பகுதி மிக வலுவானது. நீண்ட நாட்கள் நீடிக்கும். இந்த மரத்தினை ஒளிபுகாத பீடங்கள், மேஜைகள் மற்றும் கட்டிடக் கட்டுமானங்களில் பயன்படுத்துகிறார்கள். பண்டைய காலத்தில் உணவுப் பொருள் சேமிக்க பயன்படுத்திய மரம் இதுவாகும்.
வேங்கை மரம் நிலத்தடி நீரை அதிகரிக்க உதவும். மழைநீரை சேமிக்கவும், வறண்ட நிலங்களை பசுமையாக மாற்றவும் வழிவகை செய்யும். வீட்டின் முன்பும் குடியிருப்பு பகுதிகளிலும் நடுவதால் குளிர்ச்சியான சூழலைப் பெறமுடியும். விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உணவளிக்கும் மரங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ முறைகளில் இது அதிகமாக பயன்படுகிறது. இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இம்மரம் இந்தியாவின் கேரள-கர்நாடக எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் இலங்கையின் மத்திய மலைநாட்டிலும் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் மலைக்காடுகளில் அதிகமாக காணப்படுகிறது.
வேங்கை மரம் உள்ள பகுதிகளில் மின்னல், இடி தாக்காது. இந்த மரம் கதிர்வீச்சுகளில் இருந்து மனிதர்களைப் பாதுகாக்கும் வல்லமை கொண்டது.
வேங்கை மரத்தில் 'இயற்கை எண்ணெய்' உள்ளது. இது மரத்தை கரையான் அல்லது வேறு எந்த பூச்சி தாக்குதல்களிலிருந்தும் பாதுகாக்கிறது. தென்னிந்தியாவில் உள்ள மக்கள் தங்கள் வீட்டின் பிரதான கதவைக் கட்ட இந்த மரத்தைப் பயன்படுத்துகின்றனர்.
'புனித மரம்' என்பதால், இந்த மரத்தைக் கொண்டு கோவில் கதவுகள் மற்றும் கோவில் தேர்களைக் கட்ட இது பயன்படுத்தப்படுகிறது.
சில மரங்களுக்கான சந்தை மதிப்பு எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அந்த வரிசையில் தேக்கு, செஞ்சந்தனம் ஆகியவற்றுக்கு அடுத்து மதிப்புள்ள மரமாக வேங்கை கருதப்படுகிறது.