வாழ்வியலிலும் மருத்துவத்திலும் பெரும் பங்காற்றும் வேங்கை மரத்தின் பலன்கள்!

வேங்கை மரம்
வேங்கை மரம்
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on

வேங்கை மரத்தின் தாவரவியல் பெயர், ‘டிரோகார்பஸ் மார்செபியம்’ என்பதாகும்.  இம்மரம் இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளை தாயகமாகக் கொண்டது. இது தாழ்ந்த குன்றுகளிலும் மலையை ஒட்டிய சமவெளிகளிலும் நல்ல வளமான, ஆழமான செம்மண் மற்றும் செம்புரை மண்ணிலும் நன்கு வளரும். கடற்கரை மணல் பகுதி இம்மரத்துக்கு அறவே உகந்தது அல்ல. நன்கு வளர்ச்சியடைந்த இம்மரங்கள் வறட்சியை தாங்கி வளரக்கூடிய தன்மையுடையது.

வேங்கை மரம்  தனிச் சிறப்பு வாய்ந்தது. தேக்கு, ஈட்டி மரத்துக்கு அடுத்து, தரமான மரமாகக் கருதப்படுவது வேங்கை மரம். வேங்கை மரத்தை வெட்டும்போது  சிவப்பு நிறத்தில் இரத்தம் போல சாறு வடிந்து கொண்டே இருக்கும். அதனால் இதை உதிர வேங்கை மரம் என்று கூறுவார்கள். வேங்கை மரத்துப் பூக்கள் மஞ்சள் நிறத்தில் சிறுத்தை உடலில் உள்ள புள்ளிகள் போலக் காணப்படும்.

வேங்கை மரத்தின் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் உடையவை. வேங்கை மரத்தின் இலையையும், பூவையும், உடம்பில் தொடர்ந்து பூசிக் குளித்து வந்தால், கொழுப்புக் கட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து விடும். வேங்கை மரத்தின் பட்டையில் உள்ள, ‘டிரோசிலியின்’ என்ற வேதிப்பொருள் சர்க்கரை நோயை குணப்படுத்தும் வல்லமை கொண்டது. நீரிழிவு நோயுள்ளோர் வேங்கை மரக்குவளையில் நீர் அருந்தினால் குணம் பெறலாம்.

வேங்கை மரப்பட்டையில் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் நிரம்பிக் காணப்படுவதால் இம்மரப் பட்டையின் கஷாயம் பெண்களுக்கு ஏற்படக்கூடிய எலும்பு சம்பந்தமான குறைபாடுகளைக் குணப்படுத்தும். இதில் டானிக் ஆசிட், அமினோ ஆசிட் என பல்வேறு சத்துக்கள் உள்ளன. இந்தப் பட்டையை இரும்புச்சத்து மருந்துகளிலும் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.

வேங்கை மரத்தை வெட்டும்போது வடிகின்ற இரத்த நிறத்தில் இருக்கும் பாலை கால் பாதத்தில் உள்ள வெடிப்புகள் குணமாகப் பயன்படுத்துவார்கள். ‘ரெட்கிரிஸ்டல்கள்’தான்  சிவப்பு நிறத்தில் வழியும் பாலுக்குக் காரணம் ஆகும். வேங்கை மரத்தின் பாலை நெற்றியில் வைத்துக் கொண்டால் பேய், பிசாசு, காற்று கறுப்பு போன்றவை நம்மை அண்டாது. இதன் சக்தி உடலில் பரவி நல்ல ஆற்றல்களையும், வாழ்வில் உயர்வுகளையும் உண்டாக்கும். வேங்கை பாலுக்கு இரத்தத்தை உறைய வைக்கும் சக்தி இருப்பதால் போருக்குப் போகுமுன் வீரர்கள் இந்த மரத்தை வணங்கி விட்டுத்தான் போவார்கள்.

இதையும் படியுங்கள்:
நீரிழிவு நோயாளிகளுக்கு காயம் விரைவில் குணமடைய செய்ய வேண்டியவை! 
வேங்கை மரம்

போர் வீரர்களுக்கு வெட்டுக் காயங்கள் ஏற்பட்டால் இதன் இலையை அரைத்து வீரத் தழும்புகளின் மீது வைத்துக் கட்டுவார்கள். காயமும் சிறிது நேரத்தில் ஆறி விடுவதுடன் வீரர்களும் புத்துணர்ச்சி பெறுவார்கள்.

வேங்கை மரத்தின் சிவப்பு நிற பிசின் உலர்ந்ததும் கருப்பாகி விடும். இந்தப் பிசினை குழந்தைகளுக்கு பொட்டாக வைக்கப் பயன்படுத்தலாம். மற்றும் இந்தப் பிசின் சரும நோயைக் குணப்படுத்தும். மேலும், இது வயிற்றுப்போக்கு நோய்க்கு சிறந்த மருந்தாகவும் விளங்குகிறது.

வெளிநாடுகளில் இந்தப் பிசினை, ‘இந்திய கினோ கம்’ என்று அழைக்கிறார்கள். தோல் பதனிடும் தொழில், காகிதம் செய்யும் தொழில், சாயத் தொழில், அத்தனைக்கும் இந்த, ‘கினோ கம்மை’தான் பயன்படுத்துகிறார்கள்.

வேங்கை மரம் உள்ள பகுதிகளில் மின்னல், இடி தாக்காது. இந்த மரம் கதிர்வீச்சுகளில் இருந்து மனிதர்களைப் பாதுகாக்கும் வல்லமை கொண்டது. வேங்கை மரம் கோயில்களின் கொடிமரம், வீட்டுக் கட்டுமான பொருட்கள் செய்யப் பயன்படுகிறது. நிலத்தின் மண் பெருமழையாலும், காற்றினாலும், அடித்து செல்லப்படுவதை தடுப்பதில் வேங்கை மரம் பெரும் பங்காற்றுகிறது.

logo
Kalki Online
kalkionline.com