சீனாவில் அதிகரித்து வரும் சுவாச தொற்றுநோய், காய்ச்சல் சம்பந்தமாக இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஒன்றிய சுகாதார துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீனா தொடர்ச்சியாக பல்வேறு வகையான வைரஸ் காட்சிகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. உலகை உலுக்கிய கொரோனா சீனாவில் தான் உருவானது என்று பல்வேறு நாடுகள் கூறி வருகின்றன. இந்த நிலையில் தற்போது புதிய வகையான காய்ச்சல் பரவல் சீனாவில் அதிகரித்து வருகிறது. இந்த வகை காய்ச்சல் பரவலினால் சுவாச பிரச்சனைகள் அதிக அளவில் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் எஸ் பி சிங் பகேல் மக்களவையில் அளித்துள்ள விளக்கத்தில் தெரிவித்திருப்பது, சீனா மற்றும் சீனா அரசின் சுகாதாரத்துறை நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. உள்நாட்டு சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான முன்னெடுப்பு பணிகளை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சீனாவில் தற்போது பரவி வரும் புதுவகை காய்ச்சல் சுவாச பிரச்சனைகளுக்கு வழி வகுக்கின்றன. இதனால் இந்தியாவில் சுவாச பிரச்சனைகள் சம்பந்தமான நோய்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதே சமயம் இந்த சுவாச பிரச்சனை வைரஸ் காரணமாக ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய அரசு மற்றும் சுகாதாரத்துறை தொடர்ச்சியாக சுவாசப் பிரச்சனைகள் சம்பந்தமான நோய்களுக்கு முன்னுரிமை அளித்து, தொடர் கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் சுவாச பிரச்சனை என்று வருபவர்களுக்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளவும், கிருமி மாதிரி சேகரித்து பரிசோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு ஒன்றிய, மாநில, மாவட்ட அளவில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் இதனால் வர்த்தக மற்றும் பயண ரீதியான எந்தவித கட்டுப்பாடையும் உலக சுகாதார அமைப்பு விதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.