

இரவில் நம் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து நட்சத்திரங்களை ரசித்ததும், மின்மினிப் பூச்சிகளின் ஒளியைத் துரத்திப் பிடிக்க முயற்சித்ததும் நம் சிறு வயது நினைவுகளில் என்றுமே மறக்க முடியாதவை. ஆனால், நமக்குச் சிறுவயதில் ஒரு சந்தேகம் இருந்திருக்கும்—"எப்படி இந்த மின்மினிப் பூச்சிகளால் மட்டும் ஒளிர முடிகிறது?"(science-behind-fireflies) என்பதுதான் அது.
இந்த இயற்கை அதிசயத்திற்குப் பின்னால் ஒரு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது. அதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
மின்மினிப் பூச்சிகள் ஒளிர்வதற்குக் காரணமான அந்த அறிவியல் நிகழ்விற்கு 'பயோலுமினெசென்ஸ்' (Bioluminescence) என்று பெயர். மின்மினிப் பூச்சியின் வயிற்றுப் பகுதியில் 'லூசிஃபெரின்' (Luciferin) என்றொரு வேதிப்பொருள் இருக்கிறது. இந்தப் பூச்சி சுவாசிக்கும் ஆக்சிஜன், அந்த லூசிஃபெரினுடன் சேரும்போது அதன் உடலில் ஒரு வேதிவினை நடக்கிறது. இந்த ரசாயன மாற்றமே ஒளியாக வெளிப்படுகிறது.
மின்மினிப் பூச்சிகள் தொடர்ந்து எரிந்துகொண்டே இருப்பதில்லை; அவை விட்டு விட்டு ஒளிரும். இதற்குக் காரணம், அவை தங்கள் உடலுக்குள் செல்லும் ஆக்சிஜனின் அளவைக் கட்டுப்படுத்துவதுதான். ஆக்சிஜன் சப்ளையைத் துண்டிக்கும்போது ஒளி அணைந்துவிடும், மீண்டும் ஆக்சிஜனை அனுப்பும்போது ஒளி பிரகாசிக்கும். இது ஒரு சுவிட்ச் போடுவதுபோல நடக்கும் நிகழ்வு!
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நம் வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்விளக்குகள் ஒளியோடு சேர்த்து வெப்பத்தையும் வெளிப்படுத்தும். ஆனால், மின்மினிப் பூச்சி வெளியிடும் வெளிச்சமோ முற்றிலும் குளிர்ச்சியான ஒளி ஆகும். ஒருவேளை இந்த ஒளி வெப்பமாக இருந்திருந்தால், மின்மினிப் பூச்சி அந்த உஷ்ணத்திலேயே எரிந்து சாம்பலாகியிருக்கும். இதனால்தான் இதை இயற்கையின் பேரதிசயம் என்று அழைக்கிறார்கள்!
மின்மினிப் பூச்சிகள் இப்படி வெளிச்சத்தைப் பரப்புவதற்குக் குறிப்பிட்ட சில காரணங்கள் உள்ளன:
காதல் சிக்னல்: ஆண் மின்மினிப் பூச்சிகள், பெண் மின்மினிப் பூச்சிகளைக் கவர்வதற்காகவே இந்த ஒளியைச் சமிக்ஞையாகப் பயன்படுத்துகின்றன.
பாதுகாப்பு அரண்: தங்களை வேட்டையாட வரும் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் இந்த ஒளியை எச்சரிக்கையாகப் பயன்படுத்துகின்றன.
மின்மினியின் உடலில் இருக்கும் 'லூசிஃபெரின்' (Luciferin) மற்றும் 'லூசிஃபெரேஸ்' (Luciferase) என்ற வேதிப்பொருள்கள் இன்று மருத்துவ ஆராய்ச்சிகளில் பெரிதும் பயன் படுகின்றன. குறிப்பாக, புற்றுநோய் செல்களைக் கண்டறியவும், உடலின் ரசாயன மாற்றங்களை ஆய்வு செய்யவும் விஞ்ஞானிகள் இந்த வேதிப்பொருள்களைப் பயன்படுத்துகிறார்கள்.
இவ்வளவு அழகான மின்மினிப் பூச்சிகள், தற்போது மனிதர்களால் ஏற்படும் ஒளி மாசு (Light pollution) மற்றும் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் அதிகப்படியான ரசாயன உரங்கள் காரணமாக அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகும். இந்த இயற்கை அதிசயங்களை நாம் அடுத்த தலைமுறைக்கும் கடத்த இயற்கையைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமையாகும்.