இந்தோனேசியாவில் உள்ள ஒரு ஒராங்குட்டான் தனக்கு ஏற்பட்ட காயத்திற்கு சுய மருத்துவம் செய்த சம்பவம் குறித்து நீங்கள் அறிவீர்களா? விலங்குகள் தங்களுடைய காயங்களை எப்படி குணப்படுத்திக் கொள்கிறது என்பதற்கு முதன்முதலாக ஆதாரம் கிடைத்துள்ளது என்று விஞ்ஞானிகள் நெகிழ்ச்சியடைந்த சம்பவம் அது.
நாம் வளர்க்கும் விலங்குகளுக்கு ஏதாவது காயம் என்றால், நாம் மருத்துவரிடம் அழைத்துச் செல்வோம். அல்லது நாமே அதனை வீட்டு மருந்துகளால் குணப்படுத்துவோம். உயிரியல் பூங்காக்களில் வளரும் விலங்குகளும் நல்முறையில் கவனிக்கப்படுவார்கள். ஆனால், வனத்தில் வாழும் விலங்குகளுக்கு அடிப்பட்டால், அவை என்ன செய்யும் என்று யோசித்ததுண்டா?
இதுவரை பல கணிப்புகள் இருந்தாலும், முதல்முறையாக ஒருசில ஆண்டுகளுக்கு முன்னர்தான் நிரூபனமாகியுள்ளது. காயமடைந்த விலங்குகள் தங்கள் காயத்தை எப்படி குணப்படுத்திக் கொள்கிறது என்பதை ஒரு குரங்கின் செயல் மூலம் பார்ப்போம்.
கடந்த ஜூன் 2022ம் ஆண்டு இந்தோனேசியாவில் உள்ள Gunung Leuser National Park-ன் விஞ்ஞானிகள் இதனை ஆதாரத்துடன் நிரூபித்தனர்.
Rakus என்ற ஒராங்குட்டானின் கண்களுக்குக் கீழ் பெரிய காயம் ஏற்பட்டது. அதனால் அது வலியால் அந்த நாள் முழுவதும் அழுதிருக்கிறது. ஆனால், அந்த குரங்கு வலியால் அழுகிறது என்பது அங்குள்ளவர்களுக்குத் தெரியவில்லை.
பொதுவாக தென்கிழக்கு ஆசியாவில் வாழும் மக்கள் தங்கள் வலி மற்றும் வீக்கத்திற்கு பயன்படுத்தும் அதே தாவரத்தைத் தேடி எடுத்துள்ளது Rakus. பின்னர் அதனை நன்றாக மென்று அந்தச் சாறை அதனுடைய காயத்தின் மேல் தடவியிருக்கிறது. அதன்பிறகு மென்றத் தாவரத்தை கையில் எடுத்து, அதனை காயத்தின் மேல் அழுத்தி வைத்திருக்கிறது. அந்த குரங்கின் செயலை விஞ்ஞானிகள் பொருமையாக கவனித்து வந்தனர். இதனையடுத்து அடுத்த ஒரே நாளில் அந்த குரங்கின் பெரிய காயம் முற்றிலும் ஆறிவிட்டது.
Rakus அந்த இலைகளை உடம்பில் வேறு எங்கும் பயன்படுத்தாமல், காயம் இருந்த இடத்தில் மட்டும் தடவியதாலும், குறிப்பாக அந்த இலைகளை பயன்படுத்தியதாலும், இந்த குரங்கு தனக்கு சுய மருத்துவம் செய்துக்கொண்டது என்பதை உறுதிசெய்தனர்.
1960ம் ஆண்டு உயிரியலாளர் Jane Goodall குரங்குகள் அவ்வப்போது மருத்துவம் குணம் கொண்ட இலைகளை மென்று சாப்பிடுவதை கண்டறிந்திருக்கிறார். ஆனால், அது ஏன்? என்றும், தங்களை குணப்படுத்ததான் அந்த இலைகளை மெல்கிறது என்பதையும் ஆதாரமாக விளக்கமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற கூற்றின் அடிப்படையில் பார்த்தோமானால், குரங்கு செய்த இந்த சுய சிகிச்சையில் ஆச்சர்யம் ஏதும் இல்லை என்றே கூற வேண்டும். ஆனால், ஒரு விலங்கு தனக்கு எப்படி சிகிச்சை செய்துக்கொள்ளும் என்பதை முதல்முறையாக ‘மனிதன்’ பார்த்தது ஆச்சர்யம்தான்.