ஒரே இடத்தில் பல நூறு வருடங்களாக நிலைத்து நிற்கும் மரம் என்றால் நாம் நம்புவோம். ராஜாக்கள் வாழ்ந்த காலத்திலிருந்து இருக்கும் மரம் என்று சொன்னாலும் நம்புவோம். ஆனால், ஒரு மரம் ஒரு அடி நகர்ந்தது என்று கூறினால், நம்புவோமா?
மரம் அசைகிறது என்று சொன்னால், காற்றின் செயல் என்று சொல்வோம். மரம் நடக்கிறது என்று சொன்னால், சொன்னவனை முட்டாள் என்று சொல்வோம். ஆனால், ஆதாரத்தைப் பார்த்தால் வாய் திறந்து ஆச்சர்யமாக நிற்போம். இந்த மரம் நகர்வதற்கும் ஆதாரம் இருக்கிறது.
பொதுவாக காட்டில் திசை மாறி போகக்கூடாது என்பதற்காக, சென்ற பாதையில் இருக்கும் மரங்களில் குறியீடு போடுவோம். அந்தளவுக்கு மரம் நகராது என்பதில் நம்பிக்கை. ஆனால், இனி உஷார் மக்களே!
Socratea Exorrhiza என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஒரு மரம்தான் நடக்கிறதாம். ஆகையால், இதற்கு நடக்கும் மரம் அல்லது நகரும் மரம் என்று மக்கள் பெயர் சூட்டியுள்ளனர். இது எவ்வாறு நடக்கிறது தெரியுமா?
அதற்கு இதன் வேர்கள்தான் காரணம். இதன் வேர்கள் மரத்தின் கீழ்ப்பகுதித் தண்டிலிருந்து உருவாவதால், பாதி வேர்களை நம்மால் காண இயலும். அதாவது முற்றிலும் பூமிக்கடியில் இருக்காது. மரத்திற்கு முட்டுக்கொடுத்து நிற்பதுபோல இருக்கும். அப்போது சூரிய ஒளி ஒரு பக்கத்தில் கிடைக்கவில்லை என்றால், ஒளி இருக்கும் திசையை நோக்கி புதிய வேர்கள் முழைக்க ஆரம்பிக்கும்.
அப்போது பழைய வேர்கள் காய்ந்து விடும். புதிய வேர்கள் தனது முட்டுக்கொடுக்கும் வேலையை செய்வதால், மரம் அதற்கு ஏற்றவாறு வசதி செய்துக்கொள்ளும். ஆகையாலேயே மரம் நகர்கிறது. இதனை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் வேர்கள் மட்டும்தான் நகர்கிறது என்று முதலில் நினைத்தனர். ஆனால், அதன்பின்னர்தான் தெரிந்தது மரமும் நகர்கிறது என்று. இன்னும் இந்த மரம் குறித்த ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றது.
அமேசான் காடுகளில் அதிகம் காணப்படும் இந்த மரம், ஒரு நாளைக்கு சுமார் 2 செ.மீ முதல் 3 செ.மீ வரை நகரக்கூடியதாகும். தினமும் பார்த்தால் அது தெரியாது, ஆனால் ஒரு வருடம் கழித்துப் பார்த்தால், முந்தைய இடத்திலிருந்து நகர்ந்திருப்பதை உங்களால் நன்றாக காணமுடியும். ஒரு வருடத்திற்கு சுமார் 20 மீட்டர் தூரம் வரை நகர்கிறது இந்த மரம்.
ஒரு சூழலுக்கேற்ப மனிதர்கள், விலங்குகள் ஆகியோர் மட்டும்தான் தங்களை மாற்றிக்கொள்வார்களா? மரமும் தன்னை மாற்றிக்கொள்ளும் என்பதற்கு உதாரணம் இந்த நகரும் மரம்தான்.
தெய்வத்துக்கே மாறுவேஷமே… மகராணிக்கு இங்கே ஏழு வேஷமா?? என்பதுபோல நீரையும், சூரிய ஒளியையும் தேடி தேடி காடு முழுவதும் சுற்றித்திரியும் ஒரு நாடோடி வாழ்க்கையைதான், இந்த மரமும் வாழ்ந்து வருகின்றது.