
மா, பலா, வாழை என்ற மூன்று பழ வகைகளும், நம் முன்னோர்களால் பழங்களிலேயே சிறந்தவை எனக் கண்டறியப்பட்டு, அவற்றிற்கு அவர்கள் 'முக்கனிகள்' என பெயரும் வைத்துப் போற்றி வந்ததை நாம் அறிவோம். வீடுகளின் கொல்லைப் புறத்தில் இடம் இருந்தால் அங்கு ஆரம்பத்தில் வாழை மரங்களை வைத்து வளர்க்க ஆரம்பித்தோம். அவற்றிலிருந்து கிடைக்கும் இலை, பூ, காய், பழம், தண்டு என அனைத்து பாகங்களும் அனைவராலும் உபயோகப்படுத்தப்பட்டன.
அதன் பின் தோப்புகளில் வளர்ந்த மா மரங்கள் வீடுகளிலும் வளர ஆரம்பித்தன. கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் மட்டுமே வளரக் கூடியவை என நாம் நினைத்திருந்த பலா மரங்கள் தற்போது பரவலாக நகரங்களிலுள்ள பல வீடுகளிலும் வளர்க்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. சிறந்த முறையில் வீட்டில் பலா மரம் வளர்த்து பயனடைவதற்கு உதவக்கூடிய சில ஆலோசனைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பலா மரம் நன்கு வளர நல்ல வெயில் தேவை. எனவே, குறைந்தது 6 மணி நேரமாவது இதற்கு சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில், தரமான பலா கன்றை வாங்கி நடுவது நல்லது. வேர் நன்றாகப் பரவ ஆழமான மற்றும் அகலமான குழியைத் தோண்டி, அதில் மண்புழு உரம், காய்ந்த மாட்டுச் சாண உரம், தேவையான அளவு வேப்பம் புண்ணாக்கு போன்றவற்றைப் போட்டு, மேலே கொஞ்சம் மண் போட்டு மூடி அதன் மீது கன்றை நட்டு வைக்கலாம். இதனால் கன்று வேரூன்றி நன்கு வளர ஆரம்பிக்கும்.
பலா கொட்டையைப் போட்டும் செடியை முளைக்கச் செய்யலாம். பலா மரத்தின் வேர்ப்பகுதியில் ஒருபோதும் தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். வீட்டிலிருக்கும் காலி இடத்தில் மேடான இடத்தில் அல்லது ஏதாவது ஒரு மூலையருகில் கார அமிலத்தன்மை (pH) 6 முதல் 7.5 கொண்ட சத்தான மண்ணைக் குவித்து மேடாக்கி அந்தப் பரப்பின் மீது பலா செடியை நட்டு வளர்க்கலாம். வேர் அருகில் எப்பொழுதும் ஈரப் பதம் வேண்டும். ஆனால், தண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது. தினசரி அளவோடு தண்ணீர் ஊற்றி வர வேண்டும். இந்த பலா கன்றில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் இருந்தால், இயற்கை முறை பூச்சிகொல்லிகளை உபயோகப்படுத்தலாம்.
பலா மரம் மிக வேகமாகவும், உயரமாகவும் வளரக்கூடியது. கொஞ்சம் முதிர்ந்த மரங்களை, பழங்களை அறுவடை செய்வதற்காக நிர்வகிக்கக்கூடிய உயரத்தில் வைத்திருக்கலாம். ஆண்டுதோறும் நிமிர்ந்த கிளைகளை கத்தரிக்கலாம். இது செங்குத்து வளர்ச்சியை விட பக்கவாட்டு வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
மண்ணில் உள்ள ஊட்டச் சத்துக்கள் மற்றும் ஈரப்பதத்திற்காக, மற்ற தாவரங்கள் இம்மரக் கன்றோடு போட்டியிடுவதைத் தடுக்க இம்மரக்கன்றை சுற்றி வளரும் களைச் செடிகளை அவ்வப்போது அகற்றிவிடுவது அவசியம். ஆறு அல்லது ஏழு வருடங்களிலேயே பழம் தரத் தயாராகும் பலா மரத்தை வீட்டிற்கு ஒன்று என வைத்து வளர்ப்பது சிறந்தது.