
உலகம் வெப்பமயமாதலைத் தடுக்க வேண்டியது அனைத்து நாடுகளின் தலையாய பொறுப்பாகும். இதற்கு Intended Nationally Determined Contributions (INDC) என்ற உறுதிமொழியை எல்லா நாடுகளும் எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
இந்த INDC என்றால் என்ன?
உலகம் வெப்பமயமாதலைத் தடுக்க நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்ற உறுதிமொழியை ஒவ்வொரு நாடும் எடுத்து அதற்கான செயல்முறைகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்துவதே INDC!
ஆக்கபூர்வமான தங்கள் திட்டத்தின் வழிமுறைகளை ஒவ்வொரு நாடும் ஐக்கியநாடுகள் சபைக்கு வழங்கும்.
ஐக்கியநாடுகள் சபையின் United Nations Framework Convention on Climate Change (UNFCCC) என்ற குழுவுக்கு ஒவ்வொரு தட்பவெப்ப மாநாடு நடப்பதற்கு முன்னரும் இது வழங்கப்பட வேண்டும்.
2015ம் ஆண்டு பாரிஸில் நடந்த மாநாடு பூமி வெப்ப, மயமாதலைக் கட்டுக்குள் கொண்டுவருவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது.
இதில் இரண்டு டிகிரி செல்ஸியஸ் என்ற மந்திர வார்த்தையை அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்டன. இதை ஒப்புக்கொண்ட 170 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இப்போதிருக்கும் வெப்பத்தைவிட இரண்டு டிகிரி செல்ஸியஸ் நிச்சயமாக உயரக் கூடாது என்பதே அடிப்படைக் கொள்கை!
ஒரு டிகிரி செல்ஸியஸ் வெப்பம் உயர்ந்தாலேயே நியூயார்க், கல்கத்தா, ஷாங்காய் போன்ற நகரங்கள் மூழ்கும். அதாவது கடல் மட்டம் இரண்டு மீட்டர் உயர்வதால் இந்த அபாயம் ஏற்படும்.
2003லிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் கிரீன்லாந்து, அண்டார்டிகா, அலாஸ்கா பகுதிகளில் மட்டும் இரண்டு டிரில்லியன் டன்கள் பனிக்கட்டிகள் உருகிவிட்டன.
பனிப்படலங்கள் உருக உருக கடல் மட்டம் உயரும். கடல் மட்டம் உயர்ந்தால் கடற்கரையோரத்தில் உள்ள நகரங்கள் அழியும்.
அத்துடன் மட்டுமல்லாமல் 60 முதல் 90 சதவிகிதம் வரை சுத்த நீரை உலகிற்கு அண்டார்டிகாதான் வழங்குகிறது என்பது மிக முக்கியமான ஒரு உண்மை.
சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தினால் குடிநீர் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் கிடைப்பதும் அரிதாகிவிடும்.
ஒரு டிகிரி செல்ஸியஸ் கூடினால் பயிர்களை அழிக்கும் நச்சுப்பூச்சிகள் அபரிமிதமாகப் பெருகும். பயிரிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே வெப்பமயமாதலைப் பற்றி அறிவியல் அறிஞர்கள் தொடர்ந்து எச்சரிக்கை செய்துகொண்டே இருந்தாலும் பெரும்பாலான நாடுகள் இதை அலட்சியப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.
வெப்பநிலை உயர்வதற்கு முக்கிய காரணம் நச்சுப்புகை வாகனங்களால் வெளியிடப்பட்டு வளி மண்டலத்தில் கலப்பதினால் தான்.
அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய மூன்று நாடுகள்தான் அதிக நச்சுப்புகையை வெளிப்படுத்துகின்றன.
நச்சுப்புகைக்கு முக்கிய காரணமான கார்பனை எப்படிக் கட்டுப்படுத்தப் போகிறோம் என்பதில்தான் இருக்கிறது எதிர்கால பூமியின் வளமை!
முதலில் ஒவ்வொருவரும் வாகனப் பயன்பாட்டைக் குறைத்து அதிலிருந்து வெளியேறும் கார்பன் நச்சுப்புகை வெளியேறுவதைத் தடுக்கலாம்.
பெட்ரோல், டீஸல் பயன்பாட்டைக் குறைத்து மின்சக்தியால் ஓடும் வாகனங்களைப் பயன்படுத்த முன்வரலாம்.
ஆயிரக்கணக்கானோர் முனைந்து செயல்பட்டால் உலகம் பிழைக்கும்.