

மரங்களை வீழ்த்தி காடுகளைக் காக்கும் ஸ்ட்ராங்ளர் அத்தி செடியின் மர்மமான வாழ்வியல் முறை மற்றும் அதன் விசித்திரமான குணங்களை முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.
இயற்கையில் பல விந்தைகளை நாம் காண்கிறோம். ஒரு மரத்தைச் சுற்றிப் படரும் ஒரு செடி அதற்கு ஆதரவு அளித்து வளர உதவும் மரத்தையே கொன்று விடுகிறது என்பது ஆச்சர்யமான விஷயம் அல்லவா. அத்தகைய ஒருவகை செடி தான் ஸ்ட்ராங்ளர் அத்தி (Strangler Fig) செடியாகும். ஸ்பானிஷ் மொழியில் இதற்குச் செல்லப்பெயர் உண்டு அதுதான் மெடாபாலோ. அதற்கு அர்த்தம் மரத்தைக் கொல்வது அல்லது இந்த செடிவகை ஒரு மரங்கொல்லி என்றும் கூறலாம்.
இந்த வகை அத்தியால் சுயமாக வளரமுடியாது. இந்த செடியானது மரத்தைச் சுற்றி படருகின்றது. ஆனால், இது வளர வளர தனக்கு ஆதரவு தரும் மரத்தையே அழித்துவிடுகின்றன. இதை எந்த வித சப்தத்துடன் செய்யாமல் மௌனமாக ஆரம்பித்து தன்னை காப்பாற்றிய மரத்தையே சிதைக்கும் அளவிற்கு செயல்படுகிறது. இது ஏதோ நாடகம் போல் உங்களுக்குத் தோன்றலாம்.
ஆனால் இந்த ஸ்ட்ராங்ளர் அத்தி (Strangler Fig) சரியான வில்லனாக செயல்படுகிறது. தமிழில் ஒரு பழமொழி உண்டு ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டினாளாம் என்று கூறுவதுண்டு.
ஆனால், ஒண்ட வந்த செடியாக வந்து மரத்தை அணுகி அதை அழித்தே விடுகிறது இந்த அரியவகை அத்தி. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்தச் செடியால் தரையில் ஊன்றி வளரமுடியாது. எதிர்பாராத விதமாகத்தான் ஸ்ட்ராங்ளர் அத்தி (Strangler Fig) தன் வாழ்க்கையை ஆரம்பிக்கிறது.
இதன் விதைகள் பறவைகள் மற்றும் பல விலங்கு இனங்களால் மரங்களின் கிளைகளில் விழுந்து வளர ஆரம்பிக்கிறது. முதலில் வளரும் போது நல்ல விருந்தாளியாக நுழையும் இது, ஆதரவு தந்த மரத்தையே முழுவதுமாக அழித்து விடும் வில்லன் வேலையைச் செய்கிறது. இவை மரத்தின் மேல் பக்கங்களில் வளர ஆரம்பித்து பிறகு இதன் வேர்களை நன்றாக மணலில் சென்று ஊன்றி விடுகிறது. இதன்பிறகு இது மிக உறுதியாக வளர ஆரம்பிக்கிறது. இதன் பிறகு மரத்தின் மேல் பக்கம் மற்றும் கீழ் பக்கங்களில் செழிப்பாக வளரத் தொடங்கிவிடுகிறது.
ஒரு செடியிலிருந்து பல செடிகள் வளர ஆரம்பிக்கின்றன. இது மரங்கொல்லியாக எப்படி செயல்படுகிறது தெரியுமா?
இது மிகவும் அடர்த்தியாக மரத்தின் எல்லாபகுதிகளிலும் ஆக்கிரமிப்பு செய்வதால் மரத்திற்கு தேவையான சூரிய வெளிச்சம், ஊட்டச்சத்துகள் மற்றும் தண்ணீர் எல்லாம் மரத்திற்கும் கிடைக்காமல் இந்த அத்தியே அவற்றையெல்லாம் உறிஞ்சி விடுகிறது.
அத்தியின் வேர்கள் எல்லாம் அடர்த்தியாகி முடிவில் மரம் அழிந்து போக கெட்டியான வேர்களே உறுதியாக இருக்கும். இதனால் மரம் பலமிழந்து தான் அழிந்து தியாகியாகி விருந்தினராக வந்த அத்தி என்ற வில்லனுக்கு இடமளிக்கிறது.
அத்திப்பழம் பறவைகள் வௌவ்வால்கள் மற்றும் குரங்குகளுக்கு முக்கிய உணவாகும். மற்ற பழவகைகள் கிடைக்காத நேரத்தில் அத்தியே கிடைக்கிறது. இது அத்தியின் வாழ்விற்கான போராட்டத்தில் ஏற்படும் செயலாகும். இந்த போட்டியில் ஒரு இனம் அழிந்து இன்னொன்றை வாழ வைக்கிறது என்று சொல்லலாம். என்னதான் அத்தி, ஸ்ட்ராங்ளர் செடி என்று அழைக்கப்பட்டாலும், இவை அதிக அளவில் வளர்ந்து சுற்றுச் சூழலை அடர்த்தியாக வைத்து காடுகளை காக்கிறது என்று சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
ட்ராபிகல் காடுகளில் இந்த ஸ்ட்ராங்ளர் அத்தி (Strangler Fig) சுற்றுச்சூழலின் பாதுகாப்பாகக் கருதப்படுகிறது. இது பல வௌவ்வால்கள், பறவைகளுக்கு இடமளிக்கிறது. சிலசமயங்களில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் போது, விலங்கு மற்றும் பறவைகளுக்கு அத்தியே உணவாகிறது. இதில் தென் அமெரிக்காவில் காணப்படும் க்ளூசியா வகை அத்தி தான் சுற்றியிருக்கும் மரத்தை அழிக்காமல் அவை சுயமாக வளர்வதாகவும் அறியப்படுகிறது.
இயற்கையின் விசித்திரமான மற்றும் மர்மமான தாவரங்களின் வாழ்வியலை முழுமையாகப் புரிந்துகொள்வதன் மூலம், நமது சுற்றுப்புறம் மற்றும் வனங்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய ஆழமான அறிவியல் பார்வையைப் பெறலாம்.