-தா. சரவணா
தமிழக மாநில மலர் செங்காந்தள் ஆகும். இது பார்ப்பதற்கு அழகாகக் காணப்படும் அதேவேளையில், கடுமையான விஷத்தன்மை கொண்டது. இதன் விதைகளுக்கு வெளிநாடுகளில் நல்ல மார்க்கெட் உள்ளது. இந்த விதைகளில் இருந்து, புற்று நோய், ஆண்மை விருத்தி போன்றவற்றுக்கான மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இங்கிருந்து அதிகளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இதன் மற்றொரு பெயர் கண்ணுவலிக் கிழங்கு ஆகும். தென் தமிழகப் பகுதிகளில் இது அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த ஓடைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், மூலனுார், தாராபுரம், உடுமலைப்பேட்டை பகுதிகளிலும் இது அதிகமாக விளைவிக்கப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆடிப்பட்டத்தில் இதன் கிழங்கு நடப்படும். பின்னர் புரட்டாசி இறுதிக்குள் பூ பூத்து, ஐப்பசி மாதத்தில் கிழங்காக மாறும். பின்னர் 6 மாதம் கழித்து கிழங்குகள் பறிக்கப்பட்டு, காய வைக்கப்பட்டு, இதற்கான ஏஜன்சிகளிடம் விற்பனை செய்யப்படும்.
இந்த கிழங்குகள் ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகம் இயற்கையாக விளையும் தன்மையுடையவை. ஆனால், இதன் கடும் விஷத்தன்மை காரணமாக ஆந்திர அரசு இதை விளைவிக்க தடை செய்துள்ளது.
இதை பயிர் செய்யும் விவசாயிகள் கூறுகையில், “கண்ணுவலிக் கிழங்கு பயிரிட்டு பணம் பார்ப்பது எளிதானது அல்ல. ஒரு முறை விதைத்தால்,
6 ஆண்டுகளுக்கு பலனளிக்கும். நாம் அறுவடை செய்யும் நேரமும் அதிகம்; விலையும் அதிகமாக இருப்பதால், அதற்கேற்ற உழைப்பு அவசியம். நல்ல உழைப்பு இருந்தால் பணத்தை அள்ளிவிடலாம்” என்றனர்.