
இந்தியப் பெருங்கடலின் நடுப்பகுதியில் பூகோள வரைபடத்தில் புள்ளி அளவு கூட இல்லாத தீவுகளை கொண்ட நாடுதான் மாலத்தீவு. 1 ச.கிமீ பரப்பளவு கூட இல்லாத பல தீவுகளைக் கொண்டுள்ளது. அண்ணாந்து பார்த்தால் மிகவும் நீலமான வானமும், தரையைப் பார்த்தால் வெயிலில் கண்ணைக் கூசும் வெள்ளைநிற மணல்களும் நிரம்பிய, சுற்றிலும் தென்னை மரங்கள் சலசலக்கும் ஓசை கொண்ட, சுத்தமான இயற்கை காற்று கொண்ட, மாசுபாடு இல்லாத சூழலினை கொண்டதுதான் மாலத்தீவு.
அழகிய பவளப்பாறை தீவுகளைக் கொண்ட இந்த நாடு உலகம் முழுவதிலுமிருந்து பயணிகளை ஈர்க்கும் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக உள்ளது. இவ்வளவு பெருமை வாய்ந்த மாலத்தீவின் எதிர்காலம் என்ன ஆகும் என்பது கேள்விக் குறியாக உள்ளது.
மாலத்தீவின் எதிர்காலம் இன்னும் கால் நூற்றாண்டு காலத்தில் மிக மோசமாக மாறலாம். மாறிவரும் சுற்றுச்சுழல், மோசமான காலநிலை, அதிகரித்து வரும் வெப்பநிலையில் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டத்தை உயர வைக்கின்றன. தொடரும் பவளப்பாறைகளின் அழிவு கடல் கொந்தளிப்பை தடுக்க இயலாமல் போய்விடும் சூழலை உருவாக்கி உள்ளது. அடிக்கடி நடைபெறும் இயற்கை சீற்றங்கள் தீவுகளை மோசமாக பாதிக்கக்கூடும்.
பருவநிலை மாற்றத்தின் விளைவுகளால் மிகவும் பாதிக்கப் படக்கூடிய நாடான மாலத்தீவு 2050 ஆம் ஆண்டில் கடல்நீர் மட்டம் உயர்ந்து வாழத் தகுதியற்றதாக மாறிவிடும்.
மாலத்தீவு நாட்டின் பல தீவுகள் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 1.5 மீ அளவில் உயரமாக உள்ளது. உலகளாவிய காலநிலை மாற்றப் சூழலில் ஒவ்வொரு ஆண்டும் கடல்நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. தாழ்வான தீவு நாடு முழுமையாக நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது. மேலும் கடல் மட்டத்தில் சிறிதளவு உயர்வு கூட பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். தீவின் புவியியல் அமைப்பு, அதன் நிலப்பரப்பின் பெரும்பகுதி பவளப்பாறைகள் மற்றும் மணல் திட்டுகளால் ஆனது, இது காலநிலை மாற்றத்தில் அதிகம் பாதிக்கப்படக் கூடியதாக உள்ளது.
உலகிலேயே அதிக பவளப்பாறைகள் மாலத்தீவில் உள்ளன, இங்கு பவளப்பாறைகள் உயர்ந்து தீவுகளாக மாறியுள்ளன. பவளப்பாறைகள் கடல் அரிப்புக்கு எதிராக இயற்கையான தடைகளாக செயல்படக் கூடியவை. தற்போது பவளப்பாறைகள் கடல் நீரில் கலக்கும் அமிலத் தன்மையினால் அழிந்து வருகின்றன. 2050 ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் 0.5 மீட்டர் வரை உயரக்கூடும். கடல்நீர் மட்டம் உயரும்போது தீவுகளில் நன்னீர் வளங்கள் குறைந்துவிடும். இதனால் மாலத்தீவு வாழத் தகுதியற்றதாக மாறி மக்கள் தீவுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்படலாம்.
மாலத்தீவு அரசு காலநிலை மாற்றத்தின் விளைவுகளைக் குறைத்து தங்கள் நாட்டைப் பாதுகாக்க முயற்சிகளை செய்து வருகிறது. மாலத்தீவின் தலைநகரான மாலேவைச் சுற்றி கடல் நீர் பாதிக்காத அளவு ஒரு சுவரினை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். தீவு கூட்டங்களின் நடுவே செயற்கை தீவை உருவாக்குகிறார்கள்.தீவுகளை சுற்றி பெரிய பாறைகளை கடலில் இட்டு கடல் அலைகளை கடற்கரைகளில் குறைத்து மண் அரிப்பைத் தடுக்க முயற்சி செய்கிறார்கள்.
மாலத்தீவு நாட்டின் பகுதிகளில் பசுமையான சுற்றுச் சூழலை பராமரிப்பதிலும், இயற்கையை அழிக்காமல் பாதுகாப்பதிலும் அவர்கள் முக்கிய கவனம் செலுத்துகின்றனர். அந்த நாட்டில் காற்று மாசுபாட்டை பெருமளவு குறைத்துள்ளனர். அங்கு பெரும்பாலும் பசுமை வாகனங்களை பயன்பாட்டில் வைத்துள்ளனர்.
மோசமான வேதியியல் தொழிற்சாலை எதுவும் அங்கு நிறுவப்படவில்லை. தற்போது வாகனங்களின் மூலம் பரவும் புகையினை குறைக்கவும் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். என்னதான் மாலத்தீவு நடவடிக்கை எடுத்தாலும் உலகளாவிய நாடுகள் சுற்றுச்சூழலை பாதுகாத்தால் மட்டுமே மாலத்தீவினை பாதுகாக்க முடியும்.