

பாம்புகள் பொதுவாக ஒருவரை தனது விஷப்பல்லால் கொத்தித்தான் கொல்லும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ஒரு வகை பாம்பு தனது கழிவுகள் மூலம் தனக்கு வேண்டிய இரையைக் கொல்லும் என்பதைக் அறியும்போது வியப்பாக உள்ளது. கேபூன் வைபர் (Gaboon Viper) எனப்படும் பாம்பு இனம்தான் இதுபோன்று வியப்புக்குரிய உயிரினமாக உள்ளது. அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா பகுதிகளில் மட்டுமே காணப்படும் இந்தப் பாம்பு இனத்தின் அறிவியல் பெயர் Bitis gabonica ஆகும். உலகிலேயே மிகப்பெரிய மற்றும் மிகக் கனமான விஷப் பாம்புகளில் ஒன்று இது. இதன் நீளம் 4லிருந்து 6 அடிகளிலும் எடை 8 முதல் 10 கிலோ வரையும் இருக்கும். இதன் உடல் இலைகளை வரைந்தது போன்ற வடிவத்தில் (Camouflage) இருப்பதால் காடுகளில் பதுங்கும் இவற்றை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இதன் வாழிடமாக அடர்ந்த காடுகள், இலைகள் விழுந்த தரை, ஈரப்பதம் அதிகம் உள்ள பகுதிகளாக உள்ளன.
முக்கோண (Triangular) வடிவில் பெரியதான தலை அதில் இரு கொம்பு போன்ற அமைப்பு மற்றும் சுமார் 5 செ.மீ (2 inch) வரை கொண்டு உலகிலேயே நீளமான விஷப் பற்கள் உள்ள பாம்பாக இது அறியப்படுகிறது. ஒரே கடியில் அதிக அளவு விஷம் செலுத்தும் திறன் இதற்கு உண்டு. இது கடித்தால் Hemotoxic + Cytotoxic எனும் தன்மை கொண்ட விஷத்தின் பாதிப்புகளாக கடுமையான வீக்கம், திசு அழுகல் (Tissue necrosis) உள் இரத்தப்போக்கு ஆகியவை ஏற்படும். சரியான சிகிச்சை இல்லையெனில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உண்டு.
ஆனால், இந்தப் பாம்பு தன்னைத் தொந்தரவு செய்தால் மட்டுமே தாக்கும் மிகவும் அமைதியான பாம்பு என்பதால் மனிதரை பெரும்பாலும் தாக்குவதில்லை. கேபூன் வைபர் பாம்பு சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்கும் முக்கிய உயிரினம் ஆகும். இது எலி, சுண்டெலி, சிறு பாலூட்டிகள் போன்றவற்றை உணவாகக் கொள்வதால் விவசாயப் பயிர் சேதம் குறைகிறது. எலிகளினால் பரவும் பிளேக், லெப்டோஸ்பைரோசிஸ் போன்ற பாதிப்பு இன்றி மனித ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது.
இதன் வாழிடமான காடு ஆரோக்கியமாக உள்ளது என்பதற்கான சான்று (Bio-indicator species) ஆகிறது. இதை பெரிய பறவைகள், சில விலங்குகள் வேட்டையாடுவதால் உணவுச் சங்கிலி சமநிலை காக்கப்படுகிறது. மேலும், இதன் விஷம் இரத்த உறைதல், மருந்து ஆராய்ச்சியில் புதிய மருந்துகள் உருவாக்க உதவுகிறது.
எல்லாம் சரி? எப்படி இதன் மலக்கழிவு எதிரியைத் தாக்க உதவுகிறது? இது தான் உண்ணும் உணவுகளின் கழிவை வெளியேற்றாமல் சுமார் 420 நாட்கள் தனக்குள் வைக்கும் திறன் கொண்டது. காரணம், அதன் எடை அதிகம் என்பதால் சட்டென்று தனது இரையை நோக்கி நகர ஏதுவாக உடலின் எடையில் 5 முதல் 25 சதவீதம் உள்ள இந்தக் கழிவின் எடை பேலன்ஸ் செய்து உதவுகிறது என்கிறது ஆய்வு.
இந்த வகை பாம்பு இந்தியாவில் இல்லை என்பது கூடுதல் தகவல். ஆனால், இதை விட கொடிய விஷம் கொண்ட இந்தியாவில் அதிக மரணங்களுக்குக் காரணமாகும் சுருட்டை விரியன் (Russell’s Viper) நமது நாட்டில் வயல், கிராமம் அடர்ந்த காடு, மனித தொடர்பு குறைவான இடங்களில் அதிகம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.