நம் முன்னோர்கள் காலத்தில் இந்த கிளுவை மரத்தை தான் வீடுகளை சுற்றி வேலியாக அமைத்து வந்தார்கள். எத்தனையோ மரங்கள் இருந்தும் ஏன் இந்த கிளுவையை வேலியாக தடுத்தார்கள்? சில மரங்களின் நிழலில் நாம் அமர்ந்தாலே நம் உடலில் உள்ள பல வியாதிகள் பறந்துவிடும். அந்த வகையில் தலமரங்களின் வரிசையில் இந்த கிளுவை மரம் உள்ளது. மேலும் சிவபெருமானுக்கு உரிய பஞ்ச வில்வமாக நொச்சி, வில்வம், மாவிலங்கை, விளா, கிளுவை இடம்பெற்றுள்ளன. இதிலிருந்தே நாம் அறிந்துக்கொள்ள முடியும் இந்த கிளுவை மரத்தின் தொன்மையும், பயன்களையும்.
இந்த கிளுவை மரத்தில் பட்ட காற்றை நாம் சுவாசித்து வந்தாலே நம் உடலில் எந்த நோய்களும் வராது. காலங்களின் மாற்றங்களுக்கு ஏற்றவாறு நம் வாழும் இடம், வாழும் வாழ்க்கை முறை என அனைத்தும் மாறி உள்ளது. வீடுகளை சுற்றி தற்போது சிமெண்ட் காம்பவுண்ட் என அனைத்தும் மாறிவிட்டது. எனினும் கிளுவை போன்ற மரங்களின் மகத்துவத்தை நாம் தெரிந்துக்கொள்வது அவசியமானது. நாம் இந்த பதிவில் கிளுவை மரத்தின் எண்ணற்ற பயன்களை காண்போம்.
கிளுவை மரத்தின் பயன்கள்
கிளுவை மரத்தின் அறிவியல் பெயர் Commiphora caudata. இது வேலி அமைப்பதற்காக வளர்க்கப்படும் மரங்களில் ஒன்று. இந்த கிளுவை மரத்தில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் உண்டு. எனினும் வயல் பகுதியில் பயிர்களை பாதுகாக்க இந்த கிளுவை வேலியை அமைப்பார்கள். இதனால் ஆடு, மாடு பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்கும். மேலும் கிளுவை இலை ஆடு, மாடுகளுக்கு நல்ல தீவண இலையாகும்.
இந்த கிளுவை வேலியை உங்கள் வீட்டை சுற்றி அமைத்து வந்தால், இதன் மேல் பட்ட காற்றை நாம் சுவாசிக்கும் போது, நம் உடலுக்கு நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. மேலும் நமக்கு சுத்தமான ஆக்ஸிஜன் கிடைக்கும்.
இந்த மரத்தில் இருந்து பெறப்படும் பிசின் 'ஓலியோ ரெசின்' எனப்படும். கிளுவை மரத்தில் இருந்து பெறப்படும் இந்த பிசின் பழங்காலத்திலிருந்தே ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பிசினை காயவைத்து பாெடியாக்கி காலை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வர உடல் பருமன் குறைந்து உடல் பொலிவு பெறும். மேலும் நரம்பு தளர்ச்சி, வயிற்று உபாதைகளுக்கு சிறந்த மருந்து இந்த கிளுவை பிசின்.
முன்பெல்லாம் இந்த கிளுவை மரத்தின் குச்சியை உடைத்து அதில் பல் துலக்கி வந்தார்கள். இதனால் பற்களில் இரத்தம் கசிவது குறைந்து, பற்கள் உறுதி பெறும்.
மேலும் கிளுவை மரத்திற்கு கொழுப்பு கட்டிகளை கரைக்கும் தன்மை உண்டு. இந்த கிளுவை மரத்தின் இலைகளை பறித்து அதனை அரைத்து கொழுப்பு கட்டிகளின் மீது பற்று போட, கொழுப்பு கட்டிகள் உடனே குணமாகிவிடும். மேலும் இலைகளை பறித்து கொதிக்க வைத்து எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்து.
மேலும் இந்த மரத்தின் பட்டை, இலை, பிசின் ஆகியவை ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.