மண்ணின் மலட்டுத்தன்மையை நீக்கும் மண் புழு உரத்தின் மாயாஜாலம்!

Benefits of vermicompost
Earthworm fertilizer
Published on

நாம் சுவாசிக்கும் காற்றும் குடிக்கும் குடிநீரும் எந்த அளவு மாசுபட்டு உள்ளதோ  அதைத் தாண்டி ஒரு பங்கு அதிகமாகவே மாசுபட்டு கொண்டது நிலம் என்று சொன்னால் நம்பித்தான் ஆகணும். மனிதர்களின் தேவை அதிகரிக்க அதிகரிக்க  அதனை ஈடு செய்வதற்காக விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களை பன்மடங்கு பெருக்குவதற்காக பெரும்பாலும் ரசாயன உரங்களே பயன்படுத்தப்படுகின்றன. எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பதைப் போல ரசாயன உரங்களை பயன்படுத்தும்போது மகசூல் அதிகரித்தாலும், அதற்கு இணையான வகையில் மண்ணின் தன்மையும் உணவுப் பொருட்களின் தன்மையும் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றன.

உணவுத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மண்ணின் தன்மையில் செய்த சிறு சிறு மாற்றங்களே நாளடைவில் மண்ணுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் அளவுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டன. அத்தகைய பாதிப்புகளில் இருந்து மண் வளத்தை மேம்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றக்கூடிய ஒன்றுதான் இயற்கையாகத் தயாரிக்கப்படும் மண் புழு உரம். அதனால்தான் மண் புழுவை விவசாயத்தின் நண்பன் என்று அழைக்கிறோம்.

இதையும் படியுங்கள்:
உருவத்தைப் பார்த்து ஏமாந்து விடாதீர்! கின்னஸ் புத்தகமே மிரளும் 'பயமற்ற' மிருகம்!
Benefits of vermicompost

சாணம், இலை தழைகள் இவற்றை ஒன்றாகக் கலந்து அந்தக் கலவையில் மண் புழுக்களை போடும்போது, மண் புழுக்கள் அவற்றை உண்டு அவை வெளியேற்றும் எச்சங்களே  மண் புழு உரம் ஆகும். ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் சாணத்தையே நாம் உரமாகப் பயன்படுத்தலாம். அதையும் தாண்டி அவற்றை மண் புழு உரமாகப் பயன்படுத்தும்போது அது மதிப்பு கூட்டப்பட்ட உரமாகப் பார்க்கப்படுகிறது. மண் புழு உரம் தயாரிப்பதற்கு  சிறிய இடமும் குறைந்தபட்ச கால அளவுமே போதுமானது. 45 முதல் 60 நாட்களில் மண் புழு உரத்தை தயார் செய்து விடலாம். மண் புழு உரத்தில்  தழைச்சத்து, சாம்பல் சத்து, கந்தகம், மெக்னீசியம், துத்தநாகம், இரும்பு, தாமிரம், போரான் போன்ற சத்துக்கள் உள்ளன.

மண் புழு உரத்தை தொடர்ந்து பயன்படுத்தும்போது மண்ணின் வளம் மேம்படுவதோடு, பயிர்களுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கின்றன. மேலும், மண் புழு உரத்தை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள்களின் நிறம், சுவை, தன்மை  மாறாமல் இருக்கிறது. மண் புழு உரத்தைப் பயன்படுத்தப்படும்போது நிலத்தில் இடப்படும் உரத்தின் அளவும் குறைகிறது. 5 டன் ரசாயன உரங்கள் போட வேண்டிய ஒரு நிலத்திற்கு 2 டன் மண் புழு உரம் போட்டாலே போதுமானது.

இதையும் படியுங்கள்:
சிறுத்தையை விட அதிவேகமான 'புல்லட்' பெரிகிரைன் ஃபால்கன் பறவைகள்!
Benefits of vermicompost

மேலும், மண் புழு  உரத்தினை தொடர்ந்து பயன்படுத்தும்போது தாவரத்தின் வேர் பகுதிகளுக்கு காற்றோட்டம் கிடைக்கிறது. இதனால் தேவைப்படும் தண்ணீரின் அளவு பகுதியாக குறைகிறது. மண் புழு உரங்களை பயன்படுத்தும் நிலத்தில் வளரும் தாவரங்கள் தண்ணீரை ஈர்த்து தக்கவைத்துக் கொள்வதால் குறைவான தண்ணீரே போதுமானது. மண் புழு உரம் பயன்படுத்தும் நிலத்தில் நுண்ணுயிர்கள் அதிகம் பெருகுவதால் விரைவான இனப்பெருக்கம் நடைபெறுகிறது.

மழை, வெள்ள காலங்களில் மண் அரிப்பைத் தடுப்பதில் மண் புழு உரம் முக்கியப் பங்காற்றுகிறது. மண் புழு உரத்தைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் விலைப் பொருட்களின் சேமிப்பு காலத்தை இயற்கையாகவே அதிகரிக்கலாம். மண் புழு உரத்தை தொடர்ந்து பயன்படுத்தும்போது பயிர்களுக்கு பூச்சிகளால் ஏற்படும் நோய் தாக்குதல் மிகவும் குறைகிறது. மண் புழு உரத்தினை தோட்டப் பயிர்களான வாழை, தென்னை, கரும்பு போன்ற வகைகளுக்கு பயன்படுத்தும்போது நல்ல மகசூல் கிடைக்கிறது. மேலும், இப்பயிர்களை மறுசுழற்சி செய்யும்போது அது ஊட்டச்சத்து மிகுந்த உரமாகவும் மாறுகிறது.

சோளம், கம்பு, பருத்தி, மக்காச்சோளம், பயறு வகைகள் போன்ற வறட்சியை தாக்குப்பிடித்து வாழும் பயிர்களுக்கு மண் புழு உரத்தினை போடுவதன் மூலம் மகசூல் அதிகரிக்கிறது. பழப் பயிர்களான கொய்யா, சப்போட்டா, எலுமிச்சை, மா போன்ற பயிர்களுக்கு மண் புழு உரத்தைப் பயன்படுத்தும்போது அதன் சுவை மற்றும் நிறம் பாதுகாக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
அதிர்ஷ்டம் வீட்டு கதவைத் தட்ட வேண்டுமா? பிரதான வாசலில் இந்த 6 செடிகள் வேண்டாமே!
Benefits of vermicompost

மண் புழு உரத்தைப் பயன்படுத்தி  விளைவிக்கப்படும் பயிர்களை உண்ணும்போது அதனால் ஏற்படும் எதிர்விளைவுகள் தடுக்கப்படுகின்றன. இதனால் உடலில் உருவாகும் தேவையற்ற ஹார்மோன் மாற்றங்களும் நோய்களும் தடுக்கப்படுகின்றன.

மண் புழு உரம் என்பது மண்ணை மட்டும் வளப்படுத்துவதோடு, மனிதர்களையும் சேர்த்து வளப்படுத்துகிறது. நோய்கள் பெருகிவரும் இக்காலகட்டங்களில் இயற்கையாக விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களை உண்பது நோய் தாக்குதல்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ள பெரிதும் உதவும். எனவே, மாடி தோட்டங்கள், வீடுகளில் சிறிதளவில் காய்கறிகளை விளைவிப்பவர்கள் கூட மண் புழு உரத்தினை தாராளமாக வாங்கிப் பயன்படுத்தலாம்.

எவ்வித ரசாயன கலப்படமும் இன்றி  இயற்கையாக விளைவிக்கப்படும் பொருட்களை உண்பதால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தையும் முழுமையாகப் பெற முடியும். மண் புழு உரம் தயாரிப்பு பற்றிய அனைத்து விளக்க முறைகளும் அரசின் சார்பாக இயங்கும் அனைத்து வேளாண் பல்கலைக்கழகங்களிலும் பயிற்றுவிக்கப்படுகிறது.

ராதா ரமேஷ்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com