
வீட்டுத் தோட்டத்தில் வைக்க அதிகம் பேர் ஆசைப்படும் ஒரு செடி என்றால் அது மல்லிகைச் செடிதான். அப்படி ஆசையாக வைக்கும் மல்லிகைச் செடிகள் வைத்த புதிதில் ஒரு சில பூக்களை மட்டும் பூத்து விட்டு, வெறும் காட்சிப் பொருளாக வீட்டுத் தோட்டத்தில் நின்றிருக்கும். ஆசை ஆசையாக அந்தச் செடியை வைத்தவர்களுக்கு அது பெரும் ஏமாற்றமாக இருக்கும். அந்த வகையில் தோட்டத்தில் மல்லிகை செடிகளில் இருந்து அதிகமான பூக்களை கொத்துக் கொத்தாகப் பூக்கச் செய்ய உதவும் சில பயன்மிகு ஆலோசனைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.
பெரும்பான்மையானவர்கள் வீட்டுத் தோட்டங்களில் பூக்களுக்கென்று தனி இடம் இருக்கும். அதிலும் குறிப்பாக, ரோஜா, மல்லிகைப்பூ செடிகளை வளர்க்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவர்.
இப்படி வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படும் மல்லிகைப் பூச்செடியில் அதிக பூக்களைப் பூக்க செய்ய தண்ணீர் மட்டும் போதாது. அதற்குத் தேவையான சத்துக்களையும் அளிக்க வேண்டும். அதற்காக பணம், பொருளை செலவு செய்யத் தேவை இல்லை.
வீட்டில் உபயோகப்படுத்திய முட்டைகளின் ஓடுகளை எடுத்துக்கொண்டு அவற்றை வெயிலில் காய வைத்து மொறுமொறுத் தன்மை ஏற்படும் வரையிலும், துர்நாற்றம் போகும் வரையிலும் காய வைத்து, பிறகு அதை ஒரு பாட்டிலில் அடைத்து அதனுடன் வினிகரை சிறிதளவு சேர்த்துக்கொண்டால் நீர்க்குமிழிகள் வரும்.
சிறிது நேரம் இப்படி ஊற வைத்து பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை செடிகளில் ஸ்பிரே செய்தால் செடிகள் நன்கு வளர்வதோடு, அதிக பூக்களையும் பூக்கும். அல்லது வாழைப்பூ தோலை எடுத்துக்கொண்டு அவற்றை சிறுகச் சிறுக வெட்டி பாட்டிலில் அடைத்து, அதனுடன் தண்ணீரை சேர்த்து 3 நாட்கள் வரை ஊற வைத்து பிறகு அவற்றை வடிகட்டி மேலும் கூடுதலாக தண்ணீரை சேர்த்துக்கொண்டு ஸ்பிரே செய்தால் மல்லிகைப்பூ செடிகளில் கொத்து கொத்தாகப் பூக்கும்.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் செடிக்கு அதிகமான பொட்டாசியம் கிடைக்கும். இதன் மூலம் கிடைக்கும் சத்தின் காரணமாக செடி நன்கு பூக்கக்கூடும். மேலும் ஊற வைத்த வாழைப்பூ தோல், கூல் போன்று காட்சியளிக்கும். அவற்றையும் மண்ணில் கொட்டி வைத்தால் மண்ணின் சத்துக்களும் அதிகரிக்கும். இதனால் மல்லிகைப்பூ அதிகமாகவும், விரைவாகவும் பூக்கும்.