
மனிதர்களுக்கு மட்டுமே உரிமையானது இல்லை இந்த பூமி. அனைத்து உயிர்களுக்கும் பொதுவானதுதானே. நகர்ப்புற சூழல் மாற மாற, புதிது புதிதாக செல்பேசிக்காக அமைக்கப்படும் கோபுரங்கள், அதிலிருந்து வரும் கதிர்வீச்சு போன்றவற்றால் நம் வீட்டுக்குள் வந்து உரிமையாகக் கூடு கட்டி குஞ்சு பொறித்த சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை தற்போது குறைய ஆரம்பித்து விட்டது. அந்தக் கதிர்வீச்சு சிட்டுக்குருவியின் கருவையே வேரறுக்கும் வல்லமை படைத்தது எனக் கூறப்படுகிறது.
சிட்டுக்குருவிகள் ‘பசரீன்கள்’ எனப்படும் குடும்பத்தைச் சேர்ந்தவை. இவை வீட்டுக் குருவிகள், அடைக்கலக் குருவிகள், ஊர்க்குருவிகள் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன. உருவத்தில் சிறிய அளவாக இருப்பதால் சிட்டுக்குருவி என்ற பெயரைப் பெற்றுள்ளன.
சிட்டுக்குருவிகள் 13 ஆண்டுகள் வரை வாழும் தன்மை கொண்டவை என்று சொல்லப்படுகிறது. நாம் வாழும் வீடுகள் அக்காலத்தில் கூரை வீடுகளாக இருந்தபோது வாழை, தென்னை நார்கள் போன்றவற்றை சேகரித்து நம் வீட்டுக் கூரையில் இவை கூடு கட்டி வாழ்ந்தன. சிட்டுக்குருவிகள் பொதுவாக எல்லா வகை தானியங்களையும், புழு பூச்சிகளையும் கொத்தித் தின்று வாழக் கூடியவை.
சுற்றுச்சூழல் பாதிப்பினால் அருகி வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இதற்காக, 'நேச்சர் ஃபாரெவர் சொசைட்டி' என்ற ஒரு அமைப்பு முகமது திலாவர் என்ற இந்திய பாதுகாவலரால் நாசிக்கில் தொடங்கப்பட்டது. அவரே நம் வீடுகளுக்குள் வரும் சிட்டுக்குருவிகளுக்கு உதவி அதன் எண்ணிக்கையைப் பெருக்கும் முயற்சியை ஆரம்பித்தார். அவர் தனது முயற்சிகளுக்காக 2008ம் ஆண்டுக்கான, 'சுற்றுச்சூழலின் நாயகர்களில்' ஒருவராகவும் போற்றப்பட்டார்.
மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்ட மாறுபாடும், சுற்றுச்சூழல் மாறுபாடும் சிட்டுக்குருவிகளின் இனத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டு வருகின்றன. எரி வாயுக்களில் இருந்து வெளியாகும் மெதில் நைட்ரேட் என்னும் வேதிப்பொருள் வெளிப்பட்டு பூச்சியினங்கள் அழிக்கப்பட்டு குருவிகளுக்கு தேவையான உணவுகள் கிடைக்காமல் போகின்றன.
மீண்டும் சிட்டுக் குருவிகள் நம் வீட்டில் கூடு கட்டி வாழ நாமும் நம்மாலான முயற்சிகளாக சிட்டுக்குருவிகள் கூடு கட்ட உதவியாக அட்டைப்பெட்டியில் துளையிட்டு குருவி நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் வைக்கலாம். இதைத் தவிர, வீட்டில் மாடிகளில் நீர், தானியங்கள் வைக்கும் வழக்கத்தைப் பின்பற்றி சிட்டுக்குருவிகளின் இனத்தைப் பாதுகாக்கலாமே.