

இயற்கையின் மர்மங்களும், ஆன்மீக நம்பிக்கைகளும் ஒன்றிணையும் புள்ளியில் உருவாவதுதான் 'உடும்பரா மலர்'. சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்படும் இந்த மெல்லிய வெண்மை நிற மலர்கள், 3,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலரும் தெய்வீக மலர் என்று பலரால் நம்பப்படுகிறது. உண்மையில் இது புனிதமான அதிசயமா அல்லது அறிவியல் பூர்வமான ஒரு விந்தையா? வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.
உடும்பரா மலர் (Udumbara Flower) என்பது 3,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலரும் என்று அறியப்படும் மிகவும் அரிய தெய்வீக மலராகும்.
இந்த மலர்கள் மிகவும் நுணுக்கமானவை. மிகச்சிறிய அளவில் நீண்ட, மெல்லியப் பட்டு போன்ற தண்டின் நுனியில் சிறிய வெண்மையான மணி வடிவில் காணப்படும். இவை செடி, கொடிகளில் மட்டுமின்றி உலோகம், கண்ணாடி, கல் மற்றும் சிலைகள் போன்ற எவ்வித சத்துக்களும் இல்லாத இடங்களிலும் வளரும் தன்மை கொண்டவை.
இந்த மலர் மிகவும் நறுமணம் மிக்கது என்றும், சவாலான சூழலிலும் செழித்து வளரும் ஆற்றல் கொண்டது என்றும் நம்பப்படுகிறது. இது மனவலிமை மற்றும் தூய்மையின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
மொத்தத்தில் இந்த உடும்பரா மலர் என்பது இயற்கையின் ஒரு மர்மமான மற்றும் அதிசயமான படைப்பாகக் கருதப்படுகிறது.
ஆன்மீக மற்றும் புராண நம்பிக்கையின் பார்வையில் இதன் சிறப்புகள்:
பௌத்த மற்றும் இந்து மத நூல்களில் இது மிகவும் பெருமையாக பேசப்படுகிறது. இந்த மலர் மிகவும் அரிதானது என்றும் புனிதமானது என்றும் நம்பப்படுகிறது.
தைத்திரீய சம்ஹிதை, மகாபாரதம் போன்ற பழமையான இந்திய நூல்களிலும், பௌத்த இலக்கியங்களிலும் இந்த மலர் குறிப்பிடப்பட்டுள்ளது. பௌத்த நூல்களில் குறிப்பிடப்படும் இந்தப் புராண மலரானது ஒரு புதிய தலைவரின் வருகையை உணர்த்துவதாக கூறப்படுகிறது.
இது கடைசியாக மலர்ந்த போது தான் கௌதம புத்தர் அவதரித்ததாக பௌத்த பாரம்பரிய கதைகளில் நம்பப்படுகிறது. பௌத்த மத நம்பிக்கைகளின் படி இந்த மலர் 3,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலரும் என்று கூறப்படுகிறது. இது ஒரு மகா ஞானியின் வருகையையோ அல்லது உலகில் நடக்கப் போகும் ஒரு நற்காரியத்தையோ குறிப்பதாகக் கருதப்படுகிறது.
தாவரவியல் உண்மை:
உடும்பரா என்பது அத்தி மரத்தைக் குறிக்கும் சம்ஸ்கிருத சொல்லாகும். தாவரவியலில் 'உடும்பரா' என்பது 'அத்தி' வகையைச் சார்ந்த ஃபைக்கஸ் ரேஸ்மோசா (Ficus racemosa) தாவரமாகும்.
வெளியே தெரிவதில்லை. அதன் காய்க்கு உள்ளேயே ரகசியமாக மலர்வதால், அது வெளியில் தெரிவதில்லை. இதனாலேயே 'அத்தி பூத்தாற் போல' என்ற பழமொழியும் உருவானது.
அறிவியல் உண்மை:
இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் உடும்பரா மலர் என்று காட்டப்படும் மிக மெல்லிய, சிறிய வெள்ளை நிற வடிவங்கள் உண்மையில் மலர்கள் இல்லை. அவை கிரீன் லேஸ்விங் (Green Lacewing) என்ற பூச்சியின் முட்டைகள் ஆகும்.
இந்த பூச்சிகள் தங்கள் முட்டைகளைப் பறவைகள், எறும்புகள் போன்ற வேட்டையாடிகள் மற்றும் பிற பூச்சிகள் உண்ணாமல் இருக்க, மரங்கள், இலைகள், கண்ணாடி மற்றும் உலோகப் பரப்புகளில் மிக மெல்லிய நூலிழை போன்ற காம்புகளின் நுனியில் முட்டை இடுகின்றன. இது பார்ப்பதற்கு காம்புடன் கூடிய சிறிய வெள்ளை மலர் போலவே தோற்றமளிக்கும். மற்றும் சில சமயங்களில் இந்த உருவங்கள் சில குறிப்பிட்ட பூஞ்சைகளின் (Slime molds) வளர்ச்சியாகவும் இருக்கலாம்.
இந்த கட்டுரையைப் படிப்பதன் மூலம், சமூக வலைதளங்களில் உலவும் கட்டுக்கதைகளுக்கும் உண்மைக்கும் இடையிலான வித்தியாசத்தை நீங்கள் துல்லியமாகப் புரிந்துகொள்வீர்கள். இனி எந்த ஒரு ஆன்மீகத் தகவலையும் அறிவியல் பூர்வமாக அணுகும் தெளிவான பார்வையை நீங்கள் பெறுவீர்கள்.