

நான் ஒரு மர நேய மிக்க மனிதன். மரங்களை மிருகங்களை விட நேசிப்பவன். முதலில் ஆலமரம் அன்னைக்கு அன்னையான மரம். அடுத்தது எதற்கும் அசராத அரசமரம். மூன்றாவதாக வள்ளல் வாழை மரம்.
வாழை மரம் ஒரு கொடை வள்ளல் மரம். எங்கள் காஞ்சிபுர பழக்கடையில் ஒரு வாழை மர கூட்டுக் குடும்பம் இருந்தது. அப்போதெல்லாம் நாங்கள் உலோக தட்டில் சாப்பிட மாட்டோம். வாழை இலைதான் எங்கள் தட்டு. தினமும் இரண்டு வேளையும் வெளிர் பச்சை தளிர் வாழை இலையில் தான் பாட்டி பரிமாறுவார்.
வாழை இலையை விட்டா செப்பு நிற பாதாம் இலைகளை சேர்த்து ஈர் குச்சி வைத்து தைத்த வட்ட இலை தட்டு. வாழை இலையில் வைக்கப்படும் உணவுக்கு தனி அழகு வந்திடும். மந்தமான வயிறும் பசி என்று அலறும்.
மதராசுக்கு வந்ததும் எங்கள் தெருவில் இருந்த பங்களா போன்ற ஒரு குஜராத்தி வீட்டிற்கு செல்ல நேர்ந்தது. அந்த வீட்டின் முன்புறம் நின்றிருந்த இரண்டு விசிறி வாழை மரம் என்னை மிகவும் வசீகர படுத்தி விட்டது. மயில்கள் போல தோகை விரித்து ஒரு ஜப்பானிய விசிறி போல இருந்த அந்த மரங்களின் instant விசிறியாகி விட்டேன்..
விசிறி வாழை ஏன் சிறப்பு வாய்ந்தது?
விசிறி வாழை மரம் காய்க்காது; குலை தள்ளாது. அதன் இலைகளையும் போட்டு சாப்பிட முடியாது. அது ஒரு அலங்கார மரம். மயில் மேகத்தை பார்த்தால் தான் தனது தோகையை விரித்து ஆடும். ஆனால், விசிறி வாழையோ எப்போதுமே தொகையை விரித்து நிற்கும்.
விசிறி வாழையை 'Traveller's Tree' என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். காரணம் இந்த மரம் கிண்ணம் போன்ற தனது தண்டு பாகத்தில் நிறைய தண்ணீர் சேர்த்து வைக்கின்றன. அந்த காலத்தில் வழிப் பயணிகள் அந்த தண்ணீரை பருகி தாகம் தீர்த்து வந்தனர் என்ற கருத்தும் உண்டு.
இந்த மரம் தோன்றியது மடகாஸ்கர் என்ற ஆப்பிரிக்கா அருகில் உள்ள தீவு. உதய சூரியன் போல தோற்றமளிக்கும் இந்த விசிறி வாழையின் ஒரு அதிசிய தன்மை அது எப்போதுமே கிழக்கு மேற்காக பகல் முழுதும் சூரிய ஒளி கிடைக்குமாறு பக்கவாட்டில் நிற்பதுதான்.
இதனால் இதற்க்கு 'EAST -WEST Tree' என்ற ஒரு பெயரும் உண்டு. இது வாழைப்பழம் போன்ற நீல நிற விதைகள் நிறைந்த capsule- களை தான் உண்டாக்குகிறது. இது சாப்பிட தகுதி அற்றது. இதன் உலர்ந்த தண்டுகளை வைத்து கூரை வேய்கிறார்கள். உறுதியான நடுப்பாகம் கட்டிடம் கட்ட பயன்படுகிறது.
மடகாஸ்கர் முதல் சென்னை வரை விசிறி வாழையின் பயணம்:
மடகாஸ்கர் அரசின் சின்னமே இந்த விசிறி வாழை தான். அந்த காலத்தில் மதராஸில் விசிறி வாழை இல்லாத பங்களாக்கள் இல்லை. வாய்க்கு விருந்தாக காயும் பழமும் தந்தால் தான் நல்ல மரமா? கண்ணுக்கு விருந்தாக காட்சி தந்தாலும் அது பாராட்ட வேண்டிய மரம் தான்
வீடு என்று ஒன்று கட்டினால் விசிறி வாழைகள் நடுவேன் என்று அன்றென்றோ சபதம் செய்தேன். அது இன்று வரை நிறைவேறவில்லை. ஆனால் இன்றும் நான் விசிறி வாழையின் மிகப்பெரிய விசிறி தான்.
உங்கள் வீட்டின் அழகை விசிறி வாழை கொண்டு இயற்கையான முறையில் எப்படி உயர்த்துவது என்பதையும், விசிறி வாழையின் தனித்துவமான இயல்புகளைக் கொண்டு உங்கள் தோட்டத்தை ஒரு சொர்க்கமாக மாற்றுவதற்கான அறிவையும் பெறுவீர்கள்.