
வீட்டைச் சுற்றி சிறிதளவே இடம் இருந்தாலும் அந்த இடத்தில் தோட்டம் போட்டு மரம், செடி, கொடி மற்றும் மூலிகைகள் வளர்ப்பது என்பது அனைவரும் கடைப்பிடிக்கும் வழக்கம். சாதாரணமாக, நாம் என்ன செய்வோம் என்றால், ஏதாவது ஒரு விதை கிடைத்தால் அதை ஒரு இடத்தில் நட்டு வைத்து விடுவோம். அது மற்ற செடி, கொடிகள் வளர்வதற்கு ஏதுவாக இடம் கொடுக்காது. அதேபோல், மரத்தில் இருக்கும் நிறைய பழங்களை சில சமயம் அப்படியே விட்டுவிடுவோம். அதுவும் அதிகமாக மகசூல் தராது. பயன் தரும் சில மரங்களை எப்படிப் பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
வாழை: வாழைக்கன்றை நடும்போது பூமியில் நல்ல தளர்வான இடத்தில் மணல் பரப்பி அதன் மீது எரு போட்டு நட்டு விட வேண்டும். மூன்று இலை வரும் வரை தண்ணீரை லேசாகத்தான் தெளிக்க வேண்டும். தவிர, அதிகமாக அதன் மீது தண்ணீரை ஊற்றினால் செடி அழுகிவிடும். ஆதலால் வாழையை நடும்பொழுது இதை கவனத்தில் கொள்வது அவசியம்.
அதன் பிறகும் அதன் மீது தண்ணீரை நேரடியாக ஊற்றாமல் பாத்தி கட்டி அந்தக் குழியில் விட்டால் வாழை நன்கு செழித்து வளரும். பின்னர் வாழை குலை தள்ளி வரும்பொழுது நிறைய கீங்கன்றுகள் வந்தால், அதில் ஒன்றை மட்டும் விட்டு விட்டு மற்றவற்றை பெயர்த்து மற்றவர்களுக்குக் கொடுக்கலாம் அல்லது மற்ற இடங்களில் நட்டு வைக்கலாம். அப்பொழுதுதான் அவை நன்றாக வளர்ந்து பெரிய பெரிய கனிகளாகக் கிடைக்கும். அப்படியே விட்டு விட்டால் எல்லா கன்றுகளும் குலை தள்ளும் என்றாலும், காய்கள் சிறுத்துப் போய்விடும். ஆதலால், புதிதாக வாழைக்கன்றை நடுபவர்கள் இதை கவனத்தில் கொள்வது அவசியம்.
பலா: பலா கன்றுக்கும் நடவு முறை இதேதான் என்றாலும், ஆழமாக குழி வெட்டினால் நல்லது. காய்க்கும் பொழுது ஒரு கொம்பிலேயே நான்கு ஐந்து வரை காய் வந்தால் அதை அப்படியே விட்டு விட்டால் காய்கள் சிறுத்து போய்விடும். எல்லாம் வளர்வதற்கு இடம் போதாது. ஆதலால் இரண்டு காய்களை மட்டும் விட்டுவிட்டு மற்ற நான்கு காய்களை சிறிதாக இருக்கும்பொழுது பறித்து பலா முசுவை சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் காயும் வேஸ்ட் ஆகாது. பழமும் நன்றாக பெருத்து நல்ல சுவையுடன் இருக்கும். ஒரு கொம்பில் இரண்டு காய்கள் வந்தால் அதில் ஒன்றை மட்டும் விட்டு விட்டு ஒன்றை எடுத்து விட்டால் நன்றாகப் பெருக்கும்.
சாத்துக்குடி: சாத்துக்குடி மரம் நட்டால் அது பழங்கள் தருவதற்கு நீண்ட வருடங்கள் காத்திருக்க வேண்டும். சிலர் இந்த மரம் வளர்ந்து பயன் தரவில்லை என்றும் இடத்தை அடைக்கிறது என்றும் வெட்டி விடுவதும் உண்டு. அப்படி வெட்டியவர்கள் விவரம் புரியாமல் வெட்டியதுதான் காரணம். ஆதலால், இந்த மரத்தை வளர்ப்பவர்கள் பொறுமை காப்பது அவசியம். மரமாக வளர்ந்து காய்க்கத் தொடங்கினால் ஒரு போகத்தில் மரத்தில் குறைந்தபட்சம் 300 பழங்களாவது காய்க்கும். இந்த மரத்திற்கு எந்தக் கஷ்டமும் பட வேண்டிய அவசியம் இல்லை. இலைகள் வாடி கொஞ்சம் சுணக்கமாக இருந்தால் நன்றாக மரத்தின் அடியில் அதன் இலைத்தழைகளை போட்டு எரு விட்டு சிறிதளவு சாம்பல் போட்டு நன்றாக பரத்தி விட்டு மூடி விட வேண்டும்.
பிறகு பாத்தி கட்டி தண்ணீர் விட்டால் பசுமையாக மாறும். பழங்கள் காய்த்துத் தள்ளும். மனிதனிடம் அதிகம் உழைப்பை வாங்காமல் மகசூல் கொடுக்கும் ஒரே மரம் சாத்துக்குடிதான். அவ்வப்பொழுது மற்ற மரங்களுக்கு எரு வைக்கும்போது இதற்கும் கொஞ்சம் விட்டால் போதும். வீட்டில் இரண்டு மரம் இருந்தால் போதும். அந்த தெருவிற்கே பழம் பறித்துக் கொடுத்து சந்தோஷப்படலாம். வீட்டில் சிறிதளவு இடம் இருந்தாலும் இந்த சாத்துக்குடி மரங்களை மூலைக்கொன்றாக வளர்த்து நல்ல மகசூல் பெறலாம்.
ஆதலால், இதுபோன்ற பயன் தரும மரங்களை வளர்ப்பவர்கள் மேற்கூறிய ஆலோசனைகளை கவனத்தில் கொண்டு பராமரித்தால் நல்ல மகசூல் பெறலாம். ஆக, மரம் வளர்ப்பீர்; மகசூல் பெறுவீர்!