காற்றின் கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக வரலாறு காணாத அளவில் மழை பொழிவு ஏற்பட்டிருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத மழைப்பொழிவை சந்தித்திருக்கின்றன திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள். ஒரே நாளில் 95 சென்டிமீட்டர் மழை பதிவாகி வானிலை ஆராய்ச்சி மைய ஆய்வாளர்களையே அதிர செய்து இருக்கிறது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் பருவநிலை மாற்றமே இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லி இருக்கிறது. குறிப்பாக மலை பிரதேசங்களில் பதிவாகும் மழைப்பொழிவு சமதளப் பகுதியில், அதும் ஒரே நாளில் பெய்திருப்பது காலநிலை மாற்றத்தின் அறிகுறியாக அமைந்திருக்கிறது.
மேலும் தமிழ்நாட்டில் எப்பொழுதும் தென்மேற்கு பருவமழையே அதிக மழைப்பொழிவை தரும், ஆனால் தற்போது வடகிழக்கு பருவமழை அதிகளவிலான மழைப்பொழிவை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் குறிப்பிட்ட சில பகுதியில் மட்டும் அதிகப்படியான மழைப்பொழிவை ஏற்படுத்தி இருக்கிறது. இது மட்டுமல்லாது எப்பொழுதும் அதிதீவிர கனமழைகள் புயலின் காரணத்தால் ஏற்படும். ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் மாறி இருக்கிறது. காற்றின் கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக நெல்லை மற்றும் தூத்துக்குடியில் மிக அதிக அளவில் கனமழை பதிவாகி இருக்கிறது.
இவ்வாறு 95 சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகி இருக்கிறது. இது காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டிருக்க கூடிய மிக முக்கிய பிரச்சினையாகும். இனி வரக்கூடிய காலங்களிலும் இது போன்ற அதி தீவிர கனமழைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கிறது.