நெடுஞ்சாலை பயணம் மேற்கொள்பவர்கள் கண்களில் அதிகம் படுவது அரளிச் செடிதான். ஏனெனில் நெடுஞ்சாலைகளில் மத்தியில் நெடுஞ்சாலைத் துறையினரால் வரிசையாக அரளி செடிகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. எவ்வளவோ செடிகள் இருக்கும் போது அரளி செடியை மட்டும் தேர்ந்தெடுத்து நெடுஞ்சாலைகளில் வைப்பதன் காரணத்தை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
அரளிச் செடியின் விஷத்தன்மை காரணமாக பெரும்பாலும் வீடுகளில் வளர்க்கப்படுவது இல்லை. அதற்கு பதிலாக நெடுஞ்சாலைகளில் செவ்வரளி செடியை அதிகம் பார்க்க முடியும்.
செவ்வரளி செடி பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு இதை பராமரிப்பதற்கு குறைந்த செலவு என்பதால் நெடுஞ்சாலைகளில் வைத்திருப்பதாக பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் செவ்வரளி செடி நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டதன் அறிவியல் காரணங்கள் வேறாகும்.
கார்பன் நச்சுக்கள் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகைகளில் அதிகமாக இருக்கும். காற்றில் கலந்து இந்த நச்சுக்கள் பயணிப்பவர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுத்தக்கூடும்.
ஆனால் வாகனங்களில் இருந்து வெளிவரும் கார்பன் துகள்களை செவ்வரளி செடியில் உள்ள இலைகள் மற்றும் பூக்கள் காற்றில் இருந்து அகற்றும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.
வறட்சியை தாங்கி வளரக்கூடிய தன்மை கொண்டவை செவ்வரளி செடிகள். அதோடு சத்தத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டவையாக இருப்பதோடு, எதிரில் வரும் வாகனங்களில் முகப்பு விளக்குகள் எதிர்ப்புற வாகன ஓட்டிகளின் மீது படாமலும் தடுக்கின்றன. ஏனெனில் செவ்வரளி செடிகளின் இலைகள் அடர்த்தி மிக்கவையாக இருக்கின்றன.
சாலையோர செடிகளை விலங்குகள் இயற்கையாகவே சாப்பிடும். ஆனால் செவ்வரளி செடியின் இலைகள் கசப்புத் தன்மை கொண்டவை ஆக இருப்பதால் இதனை விலங்குகள் சாப்பிடாது.
மழை அதிகமான காலங்களில் அரளி செடிகள் அதிகமாக வளர்ந்து விபத்துக்கள் நேரலாம். அதனால் தான் சாலையின் நடுவில் செடிகள் குறைந்த அளவு உயரமாக வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
செவ்வரளி செடிகள் எல்லா பருவ நிலைகளிலும் எல்லா காலங்களிலும் வளரக்கூடியதாக இருப்பதோடு இவ்வளவு சிறப்பு வாய்ந்த அறிவியல் நன்மைகளைக் கொண்டுள்ளதால் நெடுஞ்சாலைகளில் நம்மால் அதிகம் காண முடிகிறது.