

நம் அன்றாட வாழ்வில் இட்லி என்றாலே இட்லி அரிசி மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்துதான் சாப்பிட்டு வந்துள்ளோம். இன்று அதற்கு மாற்றாக மூன்று இட்லி வகை செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம். இது ஒரு புதுவிதமான சுவையில் நன்றாக இருக்கும்.
காஞ்சிபுரம் இட்லி
இந்த காஞ்சிபுரம் இட்லி என்பது பெருமாள் கோயில் பிரசாதமாக தரப்படும். இந்த முறையை வீட்டிலேயே செய்து பார்க்கலாம். 250 கிராம் பச்சரிசி அதனுடன் 150 கிராம் உளுந்தம் பருப்பு சேர்த்து நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். இதனை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். இந்தக் கலவையை தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு இரவு முதல் புளிக்க வைக்கவேண்டும்.
காலையில் இதனை எடுத்து அதனுடன் பொடி செய்த சீரகம், மிளகு, சுக்கு, துருவிய இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து கலந்து இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேகவைத்து எடுக்க வேண்டும். சுவை மிகுந்த காஞ்சிபுரம் இட்லி தயார். இந்த நாவூரும் காஞ்சிபுரம் இட்லிக்கு சாம்பார் சட்னி என்று எதுவுமே தேவையில்லை. அப்படியே உட்கொள்ளலாம்.
கேழ்வரகு இட்லி
100 கிராம் கேழ்வரகுடன் 50 கிராம் இட்லி அரிசி, 80 கிராம் உளுந்து சேர்த்து நன்கு அலசி 5 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். இவை நன்கு உரிய உடன் மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின் இதில் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.எட்டு மணி நேரம் புளித்த பிறகு இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
ஆரோக்கியமிக்க கேழ்வரகு இட்லி தயார். கேழ்வரகு ஒரு பாரம்பரியமான சிறுதானிய உணவாகும். இது எலும்பு மற்றும் பற்களை வலுவடைய செய்கிறது. கேழ்வரகில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது மற்றும் உடலின் சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.
ரவா இட்லி
ரவை வைத்து கேசரி உப்மா மட்டும்தான் செய்து இருக்கின்றோம். இன்று இட்லி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, இஞ்சி, துருவிய கேரட், முந்திரி தேவையான அளவு ரவை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும். இதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். இதனுடன் ஒரு கப் தயிர் சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும். இரண்டு டம்ளர் நீரூற்றி தேவையான அளவு உப்பு மற்றும் மல்லித்தழை சேர்த்து நன்கு கலக்கி இதனை அப்படியே விடவும்.
பின்னர் இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேகவைத்து எடுத்தால் சுவையான ரவா இட்லி தயார். நம் அன்றாட செய்யும் இட்லியை தவிர்த்து இவ்வாறாக செய்து கொடுப்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள் மற்றும் ஆரோக்கியமான உணவாகவும் உள்ளது.