

பைனாப்பிள் கொத்சு (கர்நாடகா ஸ்பெஷல்)
தேவை:
நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் - ஒரு கப், துருவிய வெல்லம், கொப்பரைத் துருவல் - தலா 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு, பொடித்த வேர்க்கடலை, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - 2 சிட்டிகை.
செய்முறை:
பைனாப்பிள் துண்டுகளை வேகவைத்து, மசிக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு தாளித்து, நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், கொப்பரைத் துருவல், கறிவேப்பிலை, துருவிய வெல்லம், உப்பு, பொடித்த வேர்க்கடலை, மசித்த பைனாப்பிள் சேர்த்து நன்கு கலக்கவும். கலவை நன்கு சேர்ந்து கொதித்ததும் அடுப்பை அணைக்கவும். அல்டிமேட் சுவையில் பைனாப்பிள் கொத்சு தயார்.
பைனாப்பிள் சட்னி
தேவை:
நறுக்கிய பைனாப்பிள் - 1 கப்,
பேரீச்சம் பழம் - 8,
மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்,
ஏலக்காய்ப் பொடி - 1 டீஸ்பூன்,
உலர் திராட்சை - 3 டீஸ்பூன்,
வினிகர் - 1/2 கப்,
சர்க்கரை - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
முதலில் பைனாப்பிள், பேரீச்சை இரண்டையும் ஒரு கப் தண்ணிரில் மிதமான தீயில் வேகவிடவும். தண்ணீர் வற்றியவுடன் சர்க்கரை, மிளகாய் தூள், திராட்சை, ஏலக்காய், உப்பு, விணீகர் எல்லாவற்றையும் கலந்து சுருள் பதத்துக்கு வரும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். சுவையான பைனாப்பிள் சட்னி தயார்.
பைனாப்பிள் பச்சடி
தேவை:
பைனாப்பிள் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
வெல்லத்தூள் - 1டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தயிர் - அரை கப்
அரைக்க:
தேங்காய் - சிறு துண்டு
பச்சை மிளகாய் - 3
சீரகம், கடுகு - தலா 1/2 டீஸ்பூன்
தாளிக்க:
1/2 டீஸ்பூன் கடுகு
வர மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
பைனாப்பிளை சின்ன துண்டுகளாக வெட்டி வைக்கவும். கடாயில் 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு இப்பழத்தை சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அரைவேக்காடு வேகவைக்கவும். நைசாக அரைத்த விழுது சேர்த்து 5நிமிடம் மிதமான தீயில் பச்சை வாசனை போக வேக விட்டு இறக்கவும். இது நன்றாக ஆறிய பிறகு கடைந்த தயிர் சேர்க்கவும். இப்போது தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்க்கவும். பைனாப்பிள் பச்சடி தயார். சுவை அபாரம்.
பைனாப்பிள் போளி
தேவை:
மைதா மாவு – 250 கிராம்,
வட்டமாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் – 6,
தேங்காய் – அரை மூடி,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
வெல்லம் – 200 கிராம்,
நெய் – 100 மி.லி,
செய்முறை:
மைதா மாவில் சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக போளி மாவு பதத்தில் பிசைந்து மூடிவைக்கவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். பைனாப்பிளை பொடியாக நறுக்கி தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வெல்லத்தை இடித்து தண்ணீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி, சிறிது கெட்டியாக பாகு காய்ச்சவும். அரைத்த பைனாப்பிள் விழுது, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை பாகுடன் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
ஒரு வாழை இலையில் சிறிது நெய் தடவி, பிசைந்த மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திபோல் தட்டி, உள்ளே பூரணத்தை வைத்து மூடி போளியாக தட்டவும். தோசைக்கல்லில் நெய்விட்டு இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். தயாரிக்கலாம். சுவையான பைனாப்பிள் போளி ரெடி.