1. நெல்லிக்காய் பச்சடி
25 கிராம் எடையுள்ள நெல்லிக்காயைக் கொட்டை நீக்கி, பச்சை மிளகாய், இஞ்சி, மல்லிக் கீரை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து புளித்த தயிரில் கலக்கி பச்சடியாக உணவுடன் உண்டு வர அதிகரித்த பித்தம் குறையும் கண் எரிச்சல், உடற்சூடு நீங்கி உடல் குளிர்ச்சி பெறும்.
2. சட்னி பவுடர்
சட்னி பவுடர் தயாரிக்க உடைத்த கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், தேங்காய், உப்பு, புளி போன்றவற்றை மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்த எடுத்து ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால் தேவைப்படும் நேரங்களில் அந்த பவுடரை எடுத்து தேவையான தண்ணீர் சேர்த்துக் கலக்கி தாளித்தால் சட்னி தயார். மின்சாரம் இல்லாத வேளைகளிலும், வெளியூருக்கு செல்லும்போதும், இந்த பவுடர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
3. நாஞ்சில் நாட்டு இலைக்கறி கஞ்சி
ஒரு கப் அரிசியுடன், கால் கப் பாசிப்பருப்பு, 6 சின்ன வெங்காயம், 6 பல் பூண்டு, 3 காய்ந்த மிளகாய் அரை டீஸ்பூன் வெந்தயம், சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக விடவும். இதில் 15 நிமிடம் கழித்து நரம்புகள் நீக்கி கிள்ளி வைத்திருக்கும் இரண்டரை கைப்பிடி அளவு முருங்கை கீரை இலைகளை சேர்க்கவும். முருங்கை கீரை நன்றாக வெந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி துருவிய தேங்காய் துருவல் 3 ஸ்பூன் சேர்த்து விடவும். மண மணக்கும் இலைகறி கஞ்சி தயார்.
4. கசகசா பாயாசம்
3 ஸ்பூன் கசகசா, அரை கப் பச்சரிசியும் தனித் தனியாக பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். பின் ஒன்றரை கப் தேங்காய் துருவலுடன் நீர் சேர்த்து அரைத்து. பின் அரிசியுடன் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க விடவும். இத்துடன் 3/4 கப் வெல்ல பாகை சேர்த்து கெட்டி யாகாமல் கிளறி தேவைக்கு நெய், முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கினால் சுவையான கசகசா பாயாசம் ரெடி
5. சுண்டைக்காய் குழம்பு
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை போட்டு பின் பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். பின் இடித்து வைத்த சுண்டைக்காயை போட்டு நன்றாக வதக்கி பின் மிளகாய்தூள், மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து ஊற வைத்த புளியை அரித்து ஊற்றி நன்கு கிளறி கொதிக்க விடவும். இந்த சுண்டைக்காய் குழம்பு சுவையுடன், சர்க்கரை நோயையும் கட்டுக்குள் வைக்கிறது.
6. அவல் வடை
கால் கிலோ அவலை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து ஊறவைக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய ஒரு கப் வெங்காயம், ஒரு துண்டு இஞ்சி, கருவேப்பிலை, மல்லி கீரை, பச்சை மிளகாய் இவற்றுடன் ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் ஊறிய அவலையும் போட்டு நன்றாக அழுத்தி பிசையவும். தண்ணீர் சேர்க்க கூடாது. சப்பாத்திமாவு போல கெட்டியாக பிசைந்து உருண்டைகளாக உருட்டும். பின் உருண்டைகளை வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். அவல் வடை ரெடி.