சிலர் ஊறுகாய் எப்படி போட்டாலும் சீக்கிரம் கெட்டு விடுகிறது, பூச்சி வந்துவிடுகிறது, ஒருவித சலிச்ச வாடை வந்து விடுகிறது. உங்களுக்கு மட்டும் எப்படி ஒரு வருடம் ஆனாலும் ஊறுகாய் கெடாமல் இருக்கிறது என்கின்றனர். அதற்குக் காரணம்.
எந்த ஊறுகாய் போடுவதாக இருந்தாலும் உப்பு அளவு மிகவும் முக்கியம். ஆவக்காய் போடுவதாக இருந்தால் ஐந்துக்கு ஒன்று (5:1) ஐந்து கப் நறுக்கிய மாங்காய் துண்டுகள் என்றால் ஒரு கப் கல் உப்பு போட வேண்டும். இதுதான் அளவு.
மாவடு என்றால் எட்டு கப்புக்கு ஒரு கப் உப்பு தேவைப்படும்.
எலுமிச்சம் பழம், கிடாரங்காயில் புளிப்பு இருக்கும். எனவே இதற்கும் ஐந்துக்கு ஒன்று என்ற அளவு சரியாக இருக்கும்.
நெல்லிக்காய், மாகாணிக்கிழங்கு ஆகியவற்றில் ஊறுகாய் போடும்போது ஆறுக்கு ஒன்று என்ற அளவு சரியாக இருக்கும்.
ஆந்திரா ஸ்டைல் ஆவக்காய் மாங்காய் ஊறுகாய்க்கு 4 கப் மாங்காய்க்கு ஒரு கப் உப்பு, ஒரு கப் காரப்பொடி, ஒரு கப் கடுகு பொடி, வெந்தய பொடி ஒரு ஸ்பூன், கட்டி பெருங்காயம் ஒரு துண்டு எண்ணெயில் பொரித்து போடவும். நல்லெண்ணெய் ஒரு கப்.
எந்த ஊறுகாய் போடுவதாக இருந்தாலும் நல்லெண்ணெய்தான் சிறந்தது. அதற்கு அடுத்து கடுகு எண்ணெயில் போடலாம். கடுகு எண்ணெய் வாசனை பிடிக்காதவர்கள் வேறு எந்த எண்ணையும் உபயோகிக்காமல் நல்லெண்ணெய் உபயோகிப்பதுதான் சிறந்தது.
ஆவக்காய் மாங்காய், கடுகு மாங்காய் ஆகியவற்றிற்கு கடுகை வெயிலில் சிறிது நேரம் வைத்து அல்லது வெறும் வாணலியில் சூடு செய்து (வெடிக்க விடாமல்) மிக்ஸியில் பொடித்து சேர்க்க ருசியும் மணமும் கூடுவதுடன் ஒரு வருடமானாலும் கெடாமல் இருக்கும்.
அதேபோல் ஊறுகாய்க்கு பெருங்காயத் தூளை சேர்ப்பதை விட பெருங்காயக்கட்டி மிகவும் வாசனை தரக்கூடியது.
50 கிராம் வெந்தயத்தை வெறும் வாணலியில் நன்கு சூடு வர வறுத்து சிறிது ஆற விடவும். அதேபோல் பெருங்காயக் கட்டியை சின்னச்சின்ன துண்டுகளாக கிள்ளி போட்டு வெறும் வாணலியில் நன்கு மொறுமொறுப்பாகும் வரை வறுத்தெடுக்கவும். இரண்டையும் சிறிது ஆறியதும் மிக்சியில் பொடித்து வைத்துக் கொண்டால் வெந்தய மாங்காய், கடுகு மாங்காய், ஆவக்காய் எல்லாவற்றிற்கும் பயன்படுத்தலாம்.
மோர் மிளகாய் போடுவதாக இருந்தால் மோர் நன்கு புளித்திருக்க வேண்டும். அத்துடன் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து தயிர் கலந்து தேவையான உப்பு சேர்த்து மிளகாயை குண்டூசியால் ஆங்காங்கு சிறு துளையிட்டு மோரில் ஊறவைக்கவும். நன்கு ஊறியதும் மூன்று நாட்களுக்கு பிறகு வெயிலில் காய வைக்க மோர் மிளகாய் தயார்.
ஊறுகாயில் உப்பு குறைந்தால் விரைவில் கெட்டுவிடும். சளிப்பு வாசனை வந்துவிடும்.
ஊறுகாய் என்பதே உப்பு, புளிப்பு, காரத்தின் கலவை தானே. போடும் மசாலாக்களின் அளவு சரியாக இருந்தால் ஒரு வருடம் ஆனாலும் கெடாது.