

தினமும் காலையில் குழந்தைகளுக்கு Lunch Box கட்டும்போது நமக்கு வரும் பெரிய தலைவலி, இன்னைக்கு என்ன சாதம் செய்றது? என்பதுதான். அதிலும் அவரைக்காய், பீன்ஸ் போன்ற பச்சை காய்கறிகளைப் பொரியலாக வைத்தால், அது அப்படியே வீட்டுக்குத் திரும்பி வந்துவிடும். அவரைக்காயில் இருக்கும் அந்த லேசான துவர்ப்பு சுவை குழந்தைகளுக்குப் பிடிக்காது.
ஆனால், அதே அவரைக்காயை வைத்து, தக்காளி சாதம் போலவோ அல்லது பிரியாணி சுவையிலோ ஜூஸியாக ஒரு சாதம் கிளறினால், தட்டு காலியாகிவிடும். வாருங்கள், அந்த ஆரோக்கியமான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கப்
பிஞ்சு அவரைக்காய் - 15 முதல் 20
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா அல்லது பாவ் பாஜி மசாலா - ½ டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு - தாளிக்க
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை!
முதலில் இந்தச் சாதத்திற்குத் தேவையான அவரைக்காயைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. முத்துன காயாக இல்லாமல், நல்ல பிஞ்சு அவரைக்காயாக பார்த்து வாங்க வேண்டும். அதை நன்கு கழுவிவிட்டு, எவ்வளவு பொடியாக நறுக்க முடியுமோ அவ்வளவு பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். அப்போதுதான் சாதத்துடன் கலக்கும்போது காய்கறி தனியாகத் தெரியாது, சீக்கிரமும் வேகும். சாதத்தை முன்கூட்டியே வடித்து ஆறவைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு வாணலியில் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றவும். நெய் சேர்ப்பது குழந்தைகளுக்குப் பிடித்தமான வாசனையைக் கொடுக்கும். சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் சோம்பு போட்டுத் தாளிக்கவும். சோம்பு வாசனை இந்தச் சாதத்திற்கு மிக முக்கியம். பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்கவும்.
அடுத்ததாக, நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்கு குழைய வதக்கவும். தக்காளி மசிந்தவுடன், நாம் பொடியாக நறுக்கி வைத்துள்ள அவரைக்காயைச் சேர்க்கவும். காய்கறியை எண்ணெயிலேயே இரண்டு நிமிடம் வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
இப்போது காய்கறி வேகுவதற்குச் சிறிதளவு தண்ணீர் தெளித்து, மூடி போட்டு மிதமான தீயில் 5 நிமிடம் வேகவிடவும். அவரைக்காய் வெந்து, மசாலா எண்ணெய் பிரிந்து தொக்கு பதத்திற்கு வரும். அது மிகவும் வறண்டு போகாமல், லேசான ஈரப்பதத்துடன் இருக்கும்போதே அடுப்பை சிம்மில் வைக்கவும். இப்போது வடித்து வைத்துள்ள சாதத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிளறவும்.
சாதம் உடைந்துவிடாமல், மசாலா எல்லா இடத்திலும் படும்படி மெதுவாகப் பிரட்டவும். காய்கறி மசாலா சாதத்துடன் ஒன்று சேர்ந்த பிறகு, அடுப்பை அணைத்து விடவும். கடைசியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழைகளைத் தூவினால், கமகமக்கும் அவரை சாதம் தயார்.