பீன்ஸ் பயன்படுத்தி இதுவரை நீங்கள் விதவிதமான உணவுகளை செய்து ருசித்திருப்பீர்கள். ஆனால் ஒருமுறை இந்த பதிவில் நான் சொல்லப்போவது போல பீன்ஸ் பருப்பு உசிலி செய்து சாப்பிட்டுப் பாருங்கள். சுவை உண்மையிலேயே சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - ¼ கப்
கடலைப்பருப்பு - 1 கப்
பீன்ஸ் - ¼ கிலோ
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
செய்முறை
உசிலி செய்வதற்கு துவரம் பருப்பு மற்றும் கடலை பருப்பை குறைந்தது 12 மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். எனவே இன்று காலை நீங்கள் உசிலி செய்யப் போகிறீர்கள் என்றால் முதல் நாள் இரவே பருப்பை ஊற வைத்து விடுவது நல்லது. அப்போதுதான் அதற்கான பக்குவம் கிடைக்கும்.
பீன்ஸை நன்கு கழுவி பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஊறவைத்த பருப்பை மிக்ஸியில் போட்டு பெருங்காயம், உப்பு, வரமிளகாய் சேர்த்து விழுது போல அரைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து மிதமான தீயில் கிளறிக்கொண்டே இருந்தால் அது உதிரி உதிரியாக மாறிவிடும். அதை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு வேக வைத்துள்ள பீன்ஸை வாணலியில் போட்டு, பருப்பையும் சேர்த்து, தனியாக ஒரு கரண்டியில் எண்ணெய், கருவேப்பிலை, கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து கலந்து விட்டால் சூப்பர் சுவையில் பீன்ஸ் பருப்பு உசிலி ரெடி.
இந்த உசிலியை காரக்குழம்பு, மிளகுக் குழம்பு, வத்தக் குழம்பு போன்றவற்றிற்கு சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இதே போல பல காய்கறிகளை சேர்த்து விதவிதமான பருப்பு உசிலி செய்யலாம்.