நீங்கள் தென்னிந்திய உணவு வகைகளின் ரசிகராக இருந்தால், அல்லது அதன் சுவையை ஆராய விரும்பினால், கட்டாயம் ஒரு முறையாவது இந்த கர்நாடகா ஸ்பெஷல் பிஸிபேளாபாத் முயற்சிக்க வேண்டும். சிலருக்கு சாம்பார் சாதம் என்றாலே விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் குறிப்பாக, மொத்தமாக பிஸிபேளாபாத் பதத்திற்கு அதை செய்து கொடுத்தால், அவர்களின் நாக்குகள் அதற்கு அடிமையாகிவிடும். எனவே இந்த பதிவில் நெய் மணக்கும் பிசிபேளாபாத் வீட்டிலேயே எப்படி செய்யலாம் எனத் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - ½ கப்.
காய்கறிகள் - தக்காளி, வெங்காயம், பீன்ஸ், கேரட், முருங்கைக்காய் எல்லாம் சேர்த்து 1 கப்.
சாம்பார் பவுடர் - 3 ஸ்பூன்
தண்ணீர் - 4 கப்
புளிக் கரைசல் - ¼ கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - ½ ஸ்பூன்
நெய் - 3 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
முதலில் பருப்பு, அரிசி இரண்டையும் தண்ணீர் விட்டு அலசி, தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் ஊற விடுங்கள். பின்னர் அந்த தண்ணீரை வடித்து எடுத்துவிட்டு சிறிதளவு தண்ணீர், நெய், உப்பு, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து குக்கரில் மூன்று விசில் விட்டு வேக விடவும்.
அடுத்ததாக வெங்காயம், தக்காளி தேவையான காய்கறிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
பின்னர் ஒரு மண் சட்டியை எடுத்து அதில் கொஞ்சம் நெய் ஊற்றி சூடானதும், வெட்டி வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு, மஞ்சள் தூள், சாம்பார் பவுடர், உப்பு சேர்த்து வதக்குங்கள். அல்லது நீங்கள் குக்கரில் செய்தால் காய்கறிகள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு ஒரு விசிலில் வேக விடலாம்.
காய்கறிகள் நன்கு வெந்ததும் அதில் கொஞ்சம் புளிக்கரைசல் விட்டு, நன்கு கொதிக்க விடுங்கள். பிறகு ஏற்கனவே வெந்து தயாராக இருக்கும் பருப்பு மற்றும் சாதத்தை அதில் சேர்த்து கலந்து விடவும்.
இறுதியில் தனியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து அது சூடானதும் நெய், கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் கருவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, சாதத்தில் கொட்டி கிளறினால் சுவையான நெய் மணக்கும் பிஸிபேளாபாத் தயார்.
இதன் மேலே கொஞ்சம் கொத்தமல்லித் தழை தூவி பரிமாறினால், கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் அனைத்தையும் சாப்பிட்டு விடுவார்கள்.