குல்பி இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு ஐஸ்கிரீம் வகையாகும். இதன் கிரீமி அமைப்பு மற்றும் வித்தியாசமான சுவை அனைவருக்குமே பிடிக்கும். பாரம்பரிய குல்பி ரெசிபிக்கள் பெரும்பாலும் பால் மற்றும் பல்வேறு மசாலா பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படுகின்றன. ஆனால் வீட்டில் இருக்கும் ரொட்டித் துண்டுகளை பயன்படுத்தியே எளிதாக குல்பி நாம் தயாரிக்க முடியும். சரி வாருங்கள் அது எப்படி எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
6 ரொட்டித் துண்டுகள்
3 கப் பால்
1 கப் கண்டென்ஸ்டு மில்க்
½ கப் சக்கரை
¼ கப் நட்ஸ்
¼ ஸ்பூன் ஏலக்காய் தூள்
செய்முறை:
முதலில் ரொட்டித் துண்டுகளின் கருப்பாக இருக்கும் ஓரங்களை நீக்கிவிட்டு, வெள்ளையாக இருக்கும் பகுதியை மிக்ஸியில் சேர்த்து பிரட் தூள் அரைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பெரிய வாணலியில் பாலை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். பால் கருகாமல் இருக்க அவ்வப்போது கிளறவும். பின்னர் தீயை குறைத்து ரொட்டித் துளை வாணலியில் சேர்த்து கிளறவும்.
ரொட்டி பாலை முழுமையாக உறிஞ்சும் வரை சுமார் 15 நிமிடங்களுக்கு அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருங்கள். இந்த கலவை கெட்டித் தன்மைக்கு மாறியதும், கண்டென்ஸ்டு மில்க், சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறுங்கள்.
இந்த கலவையை மேலும் 10 நிமிடங்களுக்கு குறைந்த வெப்பத்தில் கிளறிக் கொண்டிருந்தால் ஒரு கிரீமி அமைப்பிற்கு மாறும். இப்போது வாணலியை கீழே இறக்கி நறுக்கிய நட்ஸ் சேர்த்து நன்கு கிளறவும்.
இறுதியாக உங்களிடம் குல்பி அச்சுக்கள் இருந்தால் அதில் ஊற்றி ஃப்ரீசரில் வைக்கலாம். இல்லையேல் வீட்டில் இருக்கும் சிறிய டம்ளரில் ஊற்றி அதன் உள்ளே ஐஸ்கிரீம் குச்சியை வைத்து ஃப்ரீசரில் சுமார் ஆறு மணி நேரம் வைத்தால், சூப்பர் சுவையில் பிரட் குல்பி தயார்.
இந்த கோடை காலத்திற்கு இதை சாப்பிடுவதற்கு அவ்வளவு சுவையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ரெசிபியை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.