

இதுவரை முட்டைகோஸ் பயன்படுத்தி வெறும் பொரியல் மட்டும் தான் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள், ஆனால் இதைப் பயன்படுத்தி மிகவும் சுவையான முட்டைகோஸ் சட்னி செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதை இட்லி, தோசை என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக் கொள்ள பயன்படுத்தலாம். காலை, மாலையில் டிபன் சாப்பிடுபவர்களுக்கு இது நல்ல தேர்வாக இருக்கும். இதை செய்வது மிகவும் சுலபம் என்பதால் எல்லாருமே ஈசியாக செய்துவிடலாம். சரி வாருங்கள், முட்டைக்கோஸ் பயன்படுத்தி சட்னி எப்படி செய்வது எனத் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
முட்டைகோஸ் ½ கப்
வெங்காயம் - 1
பூண்டு - 3 பல்
காய்ந்த மிளகாய் - 3
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
உளுந்து - 1 ஸ்பூன்
புளி - சிறிதளவு
தேங்காய் துருவல் - 1 கப்
கொத்தமல்லி - சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு
கடுகு 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் முட்டை கோஸை நன்கு கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு, பூண்டு, கடலைப்பருப்பு சேர்த்து நன்றாக வதக்கி, அதிலேயே வெங்காயம், புளி காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அதிலேயே நறுக்கி வைத்துள்ள முட்டைக்கோஸ் சேர்த்து கிளறிவிட்டு வதக்க வேண்டும். முட்டைகோஸ் நன்கு வதங்கியதும், துருவிய தேங்காய், கருவேப்பிலை சேர்த்து வதக்கி ஆற வைக்க வேண்டும். அடுத்ததாக முதலில் வதக்கிய சட்னி பொருட்களை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். இதிலேயே தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக அதில் முட்டை கோசை சேர்த்து, சட்னி போல அரைத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். இறுதியாக தனியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் கலந்தால் சூப்பரான முட்டைக்கோஸ் சட்னி தயார்.