எண்ணெய் குடிக்காத நாடா
தேவை: பச்சரிசி - 1 கிலோ, உளுத்தம் பருப்பு, பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பு - தலா 1 கைப்பிடி, உப்பு, காரம், பெருங்காயம், எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை: அரிசி, பருப்புகளை மிஷினில் அரைத்துக்கொள்ளவும். சலித்த மாவுடன் உப்பு, காரம், பெருங்காயம் சேர்த்து நீர் விட்டுப் பிசைந்துகொள்ளவும். காய்ந்த எண்ணெயில் நாடா அல்லது சேவு தட்டை பிடித்தபடி மாவைத் தேய்த்துப் போட்டுப் பொரிக்கவும். - எஸ்.ராஜி ரவிசங்கர், தஞ்சாவூர்
தேன் குழல்
தேவை: பச்சரிசி - 1 தம்ளர், உளுத்தம் பருப்பு - ¼ கப், வெண்ணெய் - 100 கிராம், சீரகம் - 2 டீஸ்பூன், பெருங்காயம், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை: அரிசி, பருப்பு இரண்டையும் தனித்தனியாக வறுத்து அரைத்த மாவில், மீதமுள்ள பொருள்களைச் சேர்த்து நீர் விட்டுப் பிசையவும். தேன்குழல் பிடியில் மாவைப் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழியவும்.
- டி.ஈ.கீதா சேஷாத்திரி, சென்னை
மிளகு, முந்திரி பிஸ்கட்
தேவை: மைதா - ¼ கிலோ, வனஸ்பதி - 100 கிராம், அரிசி மாவு - 4 டீஸ்பூன், பொடித்த மிளகு - 2 டீஸ்பூன், பொடித்த முந்திரி - 50 கிராம், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை: சலித்த மாவுகளில், உப்பு, காரம், முந்திரி, வனஸ்பதி சேர்த்துப் பிசைந்து, சிறிய பூரிகளாக இடவும். முதல் பூரியில் லேசாக எண்ணெய் தடவி, மற்றொரு பூரியை அதன் மேல் வைத்து மீண்டும் இட்டு மீண்டும் உருட்டவும்.உருட்டிய மாவை திரும்ப இட்டு சிறிய வட்டங்களாக (பாட்டில் மூடி கொண்டு) கத்தரித்துப் பொரிக்கவும்.
- சரோஜா ரங்கநாதன், சென்னை