வீட்டிலேயே சுவையான கேரளா பைனாப்பிள் பச்சடி செய்முறை!
கேரளாவில் மிகவும் பிரபலமான பைனாப்பிள் பச்சடியில் இனிப்பு, புளிப்பு, காரம் என்று எல்லா சுவையுமே கலந்து மிகவும் சுவையாக இருக்கும். எப்போதுமே ஒரே மாதிரி சாப்பிடுவதாக அலுத்துக்கொள்பவர்களுக்கு இந்த ரெசிபி ரொம்ப பிடிக்கும். சரி வாங்க, பைனாப்பிள் பச்சடி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சின்னதாக நறுக்கிய பைனாப்பிள்- 1கப்.
மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி.
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
துருவிய தேங்காய்-1 கப்
வரமிளகாய்-3
சீரகம்-1 தேக்கரண்டி.
வெல்லம்-1 சிட்டிகை.
தயிர்-1 தேக்கரண்டி.
கடுகு-1/4 தேக்கரண்டி.
கருவேப்பிலை- சிறிதளவு.
எண்ணெய்- தேவையான அளவு.
செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் சிறிதாக வெட்டி வைத்திருக்கும் 1 கப் பைனாப்பிளை போட்டு வதக்கவும். அத்துடன் மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்கவும். பிறகு அதில் 1 சிட்டிகை வெல்லம் சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
இப்போது மிக்ஸியில் துருவிய தேங்காய் 1 கப், வரமிளகாய் 2, சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து வெந்து கொண்டிருக்கும் அன்னாசியுடன் சேர்க்கவும். இத்துடன் 1 தேக்கரண்டி தயிர் விட்டு கிண்டவும்.
இப்போது ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அதில் கடுகு ¼ தேக்கரண்டி, வரமிளகாய் 1, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து நன்றாக தாளித்து இந்த பைனாப்பிளுடன் சேர்த்து நன்றாக ஒருமுறை கின்டி இறக்கவும். இப்போது சுவையான பைனாப்பிள் பச்சடி தயார். நீங்களும் வீட்டில் ஒருமுறை முயற்சித்து பார்த்து விட்டுச் சொல்லுங்க.