

வரகு புளியோதரை
தேவை:
வரகு - ஒரு கப்,
புளி - எலுமிச்சை அளவு,
தனியா - ஒரு டஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு,
கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வரகை அரைமணி நேரம் ஊறவைத்து, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். தனியா, காய்ந்த மிளகாயை பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் தாளித்து. புளிக் கரைசலை விடவும். இதனுடன் உப்பு, தனியா, மிளகாய் பொடி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்கவிடவும். வேகவைத்த கடைசியில் வரகை சேர்த்துக்கிளறி இறக்கவும். சுவையான வரகு புளியோதரை ரெடி.
ஆந்திரா ஸ்டைல் புளியோதரை
தேவை:
உதிராக வடித்த சாதம் - 2 கப்
புளி, உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்து, கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்.
செய்முறை:
சாதம் சூடாக இருக்கும்போதே அதை குவித்தாற் போல வைத்து நடுவில் குழியாக்குங்கள். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வையுங்கள்.
அதில் கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஆகியவற்றைப் போட்டு மூடி வையுங்கள்.
மீதமுள்ள எண்ணெயில் 1 டீஸ்பூன் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, புளி கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து பச்சை வாடை போக கொதிக்க வையுங்கள். கெட்டி ஆனதும் சாதத்தில் புளி கலவையை சேர்த்துக் கிளறுங்கள். சூப்பரான ஆந்திரா ஸ்டைல் புளியோதரை ரெடி.
குயிக் புளியோதரை
தேவை:
வடித்த சாதம் - ஒரு கப்,
புளிக் காய்ச்சல் - தேவைக்கேற்ப.
புளிக்காய்ச்சல் செய்ய: காய்ந்த மிளகாய் - 10, முழுமல்லி (தனியா), எள் - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, புளி - எலுமிச்சை அளவு, வெல்லம் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க:
கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், வேர்க்கடலை - சிறிதளவு.
செய்முறை:
புளியை தண்ணீரில் ஊறவைக்கவும். வெறும் வாணலியில் முழுமல்லி (தனியா), எள், வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வறுத்து ஆறிய பின் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, புளிக்கரைசல், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு, அரைத்த பொடி சேர்த்து மீண்டும் கொதிக்கவைத்து வெல்லம் சேர்க்கவும். சுருள வரும்வரை கிளறி இறக்கி வைக்கவும். புளிக் காய்ச்சல் தயார். வடித்த சாதத்துடன் தேவையான அளவு புளிக்காய்ச்சல் சேர்த்துக் கலந்து கிளறி பரிமாறவும். குயிக் புளியோதரை ரெடி.
மிளகு புளியோதரை
தேவை:
உதிர் உதிராக வடித்த சாதம் – 2 கப்,
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு,
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,
வெல்லம் – ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.
தாளிக்க:
எண்ணெய், கடுகு – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை – சிறிது.
வறுத்துப் பொடிக்க:
மிளகு – 2 டீஸ்பூன், வெந்தயம், கறுப்பு எள் – தலா ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்து எடுத்து வைக்கவும். அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து… புளியைக் கெட்டியாக கரைத்து ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்து வரும்போது வறுத்துப் பொடித்தவற்றையும், வெல்லத்தையும் சேர்த்துக் கிளறி (இடையிடையே நல்லெண்ணெய் விடவும்), கெட்டியாக வந்ததும் இறக்கவும். இதில் சாதத்தை சேர்த்துக்கிளறினால்… மிளகு புளியோதரை தயார்.