

தீபாவளி சமயத்தில் அதிகமாக எண்ணெய் பலகாரம் செய்வோம். அப்பொழுது கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்.
எண்ணெய் பலகாரம் செய்யும்பொழுது எண்ணெய் பொங்காமல் இருக்க ஒரு ஸ்பூன் வினிகரை விடவேண்டும்.
பட்சணங்கள் செய்யும்போது நான்கு ஸ்பூன் டால்டாவை புகைய புகைய காய்ச்சி மாவில் விட்டு பிறகு பிசைந்தால் நன்கு மொரமொரப்பாக இருக்கும்.
செக்கிலாட்டிய எண்ணெய்களுடன் சிறிது மிளகைப்போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வரை எண்ணெய் கெடாது. அதில் பலகாரம் செய்யலாம் காரல் இருக்காது.
தீபாவளி அன்று தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பொழுதும், பலகாரம் செய்யும் பொழுதும் தரையில் எண்ணெய் சிந்தி பிசுக்கு ஏற்பட்டால் அதன் மேல் கோதுமை தவிட்டைத் தூவி பெருக்கி விட்டால் தரை பிசுக்கு நீங்கி சுத்தமாகிவிடும்.
பாட்டிலில் வைக்கும் எண்ணெய் பலகாரங்கள் மற்றும் பிஸ்கட்டுகள் நமுக்காமல் இருக்க அடியில் பிளாட்டிங் பேப்பரை போட்டு அதன் மேல் பலகாரங்களை வைக்கலாம்.
பலகாரங்களை பொரிப்பதற்கு வைத்திருக்கும் எண்ணெயில் தண்ணீர் கலந்திருந்தால் ஒரு துண்டு வாழை இலையைப் போட்டு வைத்தால் எண்ணெய் வெடிப்பது குறையும்.
நூடுல்ஸ், சேமியா, இடியாப்ப சேவை போன்றவற்றை செய்யும் பொழுது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க அதனை வேக வைக்கும்போது ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வேகவிடவும்.
செக்கு கடலை எண்ணெயில் பலகாரம் செய்யும்பொழுது சிறிது புளியை உருட்டி போட்டு செய்தால் கமறாமல் இருக்கும். அதிகம் பொங்குவதையும் தடுக்கும்.
எண்ணெய்யை காய்ச்சும்பொழுது கொய்யா இலை, வெற்றிலையை போட்டாலும் பொங்குவது குறையும்.
முந்திரி, திராட்சையை எண்ணெயிலும் பொரித்து பலகாரங்களில் சேர்க்கலாம்.
தலை முடியில் பபிள்கம் ஒட்டிக்கொண்டால் சிறிய துண்டு பஞ்சை தேங்காய் எண்ணெயில் நனைத்து துடைத்தால் பபிள்கம் போய்விடும்.
சூரியகாந்தி எண்ணெய் எடையை குறைக்க உதவும். ஆதலால் அதை சமயலுக்கும் பலகாரம் செய்யவும் பயன்படுத்தலாம்.
தீபாவளிக்கு நல்லெண்ணெய் காய்ச்சும்பொழுது அதில் விதை இல்லாத வர மிளகாய், மஞ்சள் துண்டு இரண்டையும் போட்டு காய்ச்சி தலைக்கு குளித்தால் சளி பிடிக்காது.
தீபாவளிக்கு வரிசையாக அகல்விளக்குகள் ஏற்றும் பொழுது அதற்கு அடியில் சின்ன தட்டை வைத்தால் எண்ணெய் சிந்தாமல் இருக்கும்.
தேங்காய் எண்ணெயில் முறுக்கும், கடலை எண்ணெயில் தட்டையும், இட்லி பொடிக்கு நல்லெண்ணெயும் ருசியை கூட்டி தரும்.
பூஜை விளக்குகளில் எண்ணெய் இருந்தால் அவற்றை டிஷ்யூ பேப்பரால் நன்றாக துடைத்துவிட்டு லிக்யூடு போட்டு தேய்த்தால் சுத்தமாக இருக்கும்.
பலகாரம் செய்யும்பொழுது கைப்பிடித்துணியில் படும் எண்ணெய் கறையைப் போக்க நீரை கொதிக்கவைத்து சிறிது சோடா உப்பு, பர்பின் மெழுகு சேர்த்து அதில் எண்ணெய் பசை உள்ள பிசுக்கு துணிகளை முப்பது நிமிடம் ஊறவிட்டு துவைத்தால் பிசுக்கு மறைந்து துணி சுத்தமாகிவிடும்.
எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது குளியலறையில் தரை வழுக்கினால் காப்பித்தூளுடன் சோப்புத்தூளை நன்றாக போட்டு தேய்த்து கழுவினால் தரை வழுக்காது.
பலகாரம் செய்யும்போது எண்ணெய் தெறித்தால், தீக்காயம் பட்டால் உடனடியாக அந்தப் பக்கத்தை குளிர்ந்த நீரில் அமிழ்த்தவும். பர்னாலை ரெடியாக வாங்கி வைத்திருப்பது பாதுகாப்பு.
புத்தகங்களின் மேல் எண்ணெய் கறைபட்டால் கறைப்பட்ட இருபுறத்திலும் டால்கம் பவுடரைத் தடவி ஒரு மெல்லிய துணியால் துடைத்தால் கறை மறைந்துவிடும்.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here