எலுமிச்சை பழத்தின் எண்ணற்ற நன்மைகள் நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் எலுமிச்சை இலைகளிலும் பல்வேறு மருத்துவ குணம் இருப்பது நம்மில் பலர் அறியாதது.
பல வகையான நோய்களைத் தடுக்கவும் கட்டுப் படுத்தவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எலுமிச்சை இலைகளை நீரில் கொதிக்க வைத்து டீயாகவும் அருந்தலாம். இலைகளைப் பொடி செய்தும் உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம்.
எலுமிச்சை இலைகளில் மிகுந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் உடலின் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது. இது ஒற்றைத் தலைவலி மற்றும் மனநலப் பிரச்சனைகளை வெகுவாக குறைக்கிறது.
இதில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் ஆல்கலாய்டுகள் தூக்கமின்மை மற்றும் தூக்கம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.
மேலும், சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுப்பதில் மிகச் சிறப்பாக செயலாற்றுகிறது.
இதில் காணப்படும் பெக்டின் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து எடையைக் குறைப்பதில் திறம்பட செயல் படுகிறது.
வாருங்கள் எலுமிச்சை இலை இட்லி பொடியை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருள்கள்:
எலுமிச்சை இலை - ஒரு கப்
கடலைப் பருப்பு - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 15
பெருங்காய் துண்டு - 3
பூண்டு - 8 பல்
மல்லி - ஒரு தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை: வாணலியில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் எலுமிச்சை இலையை வறுக்கவும். அடுத்து கடலைப் பருப்பு, மிளகாய், பெருங்காயம், மல்லி, சீரகம், மிளகு அனைத்தையும் தனித்தனியே வறுத்துகொள்ளவும்.
மிக்ஸியில் முதலில் மிளகாய், எலுமிச்சை இலையை சேர்த்து நன்றாக பொடித்த பின் கடலைப் பருப்பு, மல்லியை சேர்த்து அரைக்கவும் . கடைசியாக, மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.
கமகமக்கும் வாசனையுடன் மிகவும் சுவையாக இருக்கும் இப்பொடியை இட்லி, தோசைக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். சாதத்துடன் கலந்து பிசைந்தும் சாப்பிடலாம்.
பின்குறிப்பு : நீங்கள் விரும்பினால் இதனுடன் ஓமம் சேர்த்துக் கொள்ளலாம்! இதே செய்முறையில் நாரத்தை இலையிலும் பொடி செய்யலாம்.