புளி நண்டல், புளி மா, புளி உப்புமா என பலவாறாக அழைக்கப்படும் இது ஒரு பாரம்பரியமான தென்னிந்திய உணவாகும். இதனை காலை உணவாகவோ இரவு டிபனாகவோ எடுத்துக் கொள்ளலாம்.
சிறுவயதில் நாங்கள் "பிரவுன் உப்புமா" என்றுதான் அழைப்போம். என் அம்மா மிக மிக சுவையாக செய்து தருவார். அதுவும் இதன் காந்தலுக்கு (பாத்திரத்தில் அடி பிடித்த மாதிரி மொறுமொறுவென இருக்கும் ஒரு பகுதி) இதில் எண்ணெய், உப்பு, காரம், புளிப்பு என எல்லாம் சேர்ந்து மிகவும் அருமையாக இருக்கும். அதற்கு நீ நான் என போட்டி போட்டுக் கொண்டு வருவோம்.
அரிசி ஒரு கப்
புளி சிறிய எலுமிச்சை அளவு
கெட்டி மோர் 1/4 கப்
மோர் மிளகாய் 2
காய்ந்த மிளகாய் 2
பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
உப்பு தேவையானது
தாளிக்க:
கடுகு,
வெந்தயப்பொடி 1/2 ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது
நல்லெண்ணெய் 1/4 கப்
புளியை நீர்க்க கரைத்து எடுத்துக் கொள்ளவும்.அரிசியை லேசாக வறுத்து ரவையா உடைத்தும் செய்யலாம். அல்லது அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து உப்பு, புளிக் கரைசல், காய்ந்த மிளகாய் சேர்த்து நைசாக இல்லாமல் ரவை பதத்திற்கு அரைத்து எடுக்கவும். இத்துடன் கெட்டி மோர் கால் கப், பெருங்காயத்தூள் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
அடி கனமான உருளி அல்லது வாணலியில் கடுகு, கருவேப்பிலை, வெந்தயப் பொடி, மோர் மிளகாய் 2 கிள்ளிப் போட்டு நல்லெண்ணையில் தாளித்து கடுகு பொரிந்ததும் கரைத்து வைத்துள்ள அரிசி ரவை கரைசலை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளறவும். அது வெந்து உதிர் உதிராக வர 15 நிமிடங்கள் ஆகும். அவ்வப்போது நல்லெண்ணெய் சிறிது விட்டு கிளறி விடவும்.
இப்படி அரிசியை நொய்யாக அரைத்து செய்வதால் உதிர் உதிராக வருவதுடன் சுவையும் அபாரமாக இருக்கும். பாத்திரத்தில் அடி பிடித்த மாதிரி இருக்கும் அந்த காந்தலை நீ நான் என போட்டி போட்டு சாப்பிடுவோம். அதன் ருசியே தனி. காந்தல் படு ருசியாக இருக்கும். செய்து பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.