சில சமயங்களில் நேரமில்லாமல் சட்டுன்னு காலை உணவாக ஏதாவது செய்து கொடுக்க வேண்டும் என்று நினைக்கும்போது இந்த பன்னீர் முட்டை இட்லியை செய்து கொடுங்க. ரொம்ப சுலபமாகவும், ஈசியாகவும் செய்து விடலாம். இட்லின்னு சொன்னதும் மாவுக்கு என்ன பண்ணன்னு பயப்பட வேண்டாம். இந்த இட்லிக்கு சுத்தமா மாவே தேவையில்லை. வாங்க, பன்னீர் முட்டை இட்லி எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.
தேவையான பொருட்கள்:
முட்டை-3
பன்னீர்-100கிராம்.
பச்சை மிளகாய்-1
வெங்காயம்-1
தேங்காய் துருவல்-1/2 கப்.
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
கடுகு-1/4 தேக்கரண்டி.
உப்பு- தேவையான அளவு.
எண்ணெய்- தேவையான அளவு.
செய்முறை விளக்கம்:
ஒரு பவுலில் 3 முட்டைகளை எடுத்து கொண்டு நன்றாக பீட் செய்து கொள்ளவும். பின்பு 100 கிராம் பன்னீரை சிறிதாக வெட்டி மிக்ஸியில் போட்டு அடித்து எடுத்துக்கொள்ளவும். பன்னீர் நன்றாக உதிரியாக வரும். அதை முட்டையோடு சேர்த்துக்கொள்ளவும். அத்துடன் ½ கப் துருவிய தேங்காயை சேர்த்து கிண்டவும்.
இப்போது அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் சிறிது ஊற்றி கடுகு போட்டு தாளித்துக்கொள்ளவும். அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக வதக்கி இறக்கிவிடவும்.
வெங்காயத்தை சற்று ஆறவிட்டு செய்து வைத்திருக்கும் கலவையுடன் சேர்த்து கிளறிவிடவும். இப்போது அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து, இட்லி சுடுவது போலவே சிறிது சிறிதாக குழியில் ஊற்றி 10 நிமிடம் வேகவைத்து எடுக்க வேண்டும். முட்டை சேர்த்திருப்பதால் நன்றாக பொங்கி இட்லி போல அழகாக வந்திருக்கும்.
இந்த இட்லி செய்ய மாவு தேவையில்லை. வீட்டிலேயே செய்யலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். நல்ல டேஸ்டாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும் இந்த பன்னீர் முட்டை இட்லி.